சாவகச்சேரி நகர சபையின் புதிய தவிசாளர் தெரிவில் இயற்கை நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் தவிசாளர், வட மாகாண ஆளுநரால் பதவி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து, புதிய உப தவிசாளர் தெரிவு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (29) நடைபெற்றது.
அது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கருத்து தெரிவித்தபோது,
சாவகச்சேரி நகரசபையில் புதிய உப தவிசாளருக்கான தெரிவு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அந்தத் தெரிவு தமிழ் தேசியப் பேரவையைப் பொறுத்தவரையிலே உண்மையிலே நடைபெற்றிருக்கக் கூடாது.
எங்களின் நிலைப்பாடு, முன்னாள் உப தவிசாளர் கிஷோர் ஜனநாயக விரோதமாக ஆளுநரால் பதவி நீக்கப்பட்டார். அதனால் உப தவிசாளர் தெரிவுக்கான கூட்டத்தை தமிழ் தேசிய கட்சிகள் புறக்கணித்தல், கோரமின்றி கூட்டம் ஒத்தி வைக்கப்படவேண்டும் என்றே இருந்தது.
முன்னாள் உப தவிசாளர் தனது பதவி பறிப்பு ஜனநாயக விரோதமான செயல் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் வழக்கின் தீர்ப்பு வரும் வரையிலாவது, புதிய உப தவிசாளர் தெரிவை நடத்தவிடாமல் தடுத்திருக்க வேண்டும்.
ஆனால் தமிழ் அரசு கட்சியினர் புதிய உப தவிசாளர் தெரிவுக் கூட்டத்துக்கு சென்றால், தெரிவு இடம்பெறும் நிலைமை காணப்பட்டதால், நாமும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் கூட்டத்தில் கலந்துகொண்டு, தமிழ் அரசு கட்சியினர் முன்னிறுத்தியவருக்கு எதிராக நாமும் ஒருவரை முன்நிறுத்தினோம். இருவரும் சம வாக்குகளை பெற்றுக்கொண்ட நிலையில், திருவுளச் சீட்டு மூலம் எம்மால் நிறுத்தப்பட்ட கோகுல்ராஜ் புதிய உப தவிசாளராக தெரிவானார்.
நான் ஏன் இதைச் சொல்கின்றேன் என்றால், ஒருபக்கம் ‘ஒற்றுமை’ என்று கூறுகிறார்கள். ஆகக் குறைந்தது தங்களின் “பங்காளிகள்” என்று சொல்லிக்கொண்டு இன்றைக்கு பறைசாற்றிக் கொண்டிருக்கக்கூடிய தரப்புகள், அந்தப் பங்காளிகளுக்குத் துரோகம் இழைக்கும் வகையில், முதுகிலே குத்துகின்ற வகையில் செயற்பட்டிருக்கக்கூடாது.
தமிழ் அரசுக் கட்சியின் செயலாளரின், அவரது எடுபிடிகளின் சித்தாந்தத்தின் காரணமாக, நீதி நியாயமில்லாமல், அதிகாரத்தை எப்படியென்றாலும் பறித்து, எதையாவது செய்து அதிகாரத்தை, பதவிகளைப் பறிக்கின்ற ஒரு கலாசாரத்தைக் கடைப்பிடிக்கின்ற ஒரு கும்பலாகத்தான் இருக்கிறார்கள்.
இன்றைக்கு தமிழ் அரசுக் கட்சி திட்டமிட்டு மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தலைமைத்துவத்தாலே திட்டமிட்டு மாற்றப்பட்டிருக்கிறது.
அந்த வகையில், நேற்றைய தினம் நடைபெற்ற உப தவிசாளர் தெரிவின்போது, ஒரு இயற்கையின் நீதி நிலைநாட்டப்பட்டிருக்கிறது. அந்த வகையிலே ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உபதவிசாளருக்கும், அந்தக் கட்சிக்கும் நாங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.




