இலங்கையின் முதலாவது உயர்கல்விக்கான தேசிய செயற்கை நுண்ணறிவு தொடர்பான கொள்கைக் கட்டமைப்பினை வடிவமைப்பதற்கு உதவுவதற்காக இலங்கையுடன் பங்காளராக ஒன்றிணைவதன் மூலம் செயற்கை நுண்ணறிவுத் துறையில் தனது உலகளாவிய தலைமைத்துவத்தினை அமெரிக்கா பலப்படுத்துகிறது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கேற்ப, அமெரிக்க செயற்கை நுண்ணறிவு நிபுணத்துவம், தராதரங்கள் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றினை அடிப்படையாகக் கொண்ட ஒரு கொள்கைக் கட்டமைப்பினை உருவாக்குவதற்காக, தனது இலங்கை எதிரிணைகளுடன் நாட்டில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மிக நெருக்கமாகப் பணியாற்றியது.
இக்கொள்கைக் கட்டமைப்பு வரைவினைத் தயாரிக்கும் செயன்முறையின் நிறைவாக, நேற்று வெள்ளிக்கிழமை (8) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் ஒரு முன்னோட்ட அறிமுக விழா நடைபெற்றது.
அமெரிக்கத் தூதரகத்தின் தூதரக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் ஜேன் ஹொவெல் பங்கேற்ற இந்நிகழ்வில் இலங்கையின் பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரினி அமரசூரிய பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.
ஜோர்ஜியா பல்கலைக்கழகத்தின் அமெரிக்க செயற்கை நுண்ணறிவு தொடர்பான விசேட பேராசிரியர் உஸ்ரி பட்டாச்சார்யாவின் தொழில்நுட்பத் தலைமையுடன் உருவாக்கப்பட்ட இம்முன்முயற்சியானது, செயற்கை நுண்ணறிவை (AI) பாதுகாப்பான, வெளிப்படைத் தன்மையுடைய மற்றும் சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட அமெரிக்காவினால் வழிநடத்தப்படும் சிறந்த நடைமுறைகளுடன் ஒத்துப்போகும் வகையில் இலங்கையைச் சேர்ந்த பல்கலைக்கழகங்கள் இணைத்துக்கொள்வதற்கு உதவி செய்கிறது.
“செயற்கை நுண்ணறிவில் அமெரிக்கா உலகளாவிய ரீதியில் முன்னணியில் உள்ளது. அத்தலைமைத்துவத்தினை எமது பங்காளர்களுக்கும் எடுத்து வருவதில் நாங்கள் பெருமையடைகிறோம்” என தூதரக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் ஜேன் ஹொவெல் கூறினார்.
“வெளிப்படைத்தன்மையுடைய, நெறிமுறை சார்ந்த மற்றும் நம்பகமான செயற்கை நுண்ணறிவு நிபுணத்துவத்தை வழங்கும் வகையில், தொழிற்பாட்டிலுள்ள அமெரிக்க புத்தாக்கத்தினை இந்த ஒத்துழைப்பு எடுத்துக்காட்டுகிறது.
அமெரிக்கத் தொழிநுட்பங்களையும் தராதரங்களையும் பகிர்வதன் மூலம், எதிர்காலத்திற்குத் தேவையான திறன்களை வளர்த்துக்கொள்வதற்கு இலங்கைக்கு நாங்கள் உதவி செய்வதோடு, அமெரிக்க நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுடனான ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளையும் நாங்கள் விரிவுபடுத்துகிறோம்.
உலக நாடுகள் அமெரிக்காவின் பங்காளர்களாகும்போது அவர்கள் உலகின் மிகவும் மேம்பட்ட மற்றும் நம்பகமான செயற்கை நுண்ணறிவுத் தீர்வுகளுக்கான அணுகலைப் பெற்றுக் கொள்கிறார்கள்” என அவர் மேலும் தெரிவித்தார்.
தனது உயர்கல்வி முறையினை நவீனமயமாக்குவதற்கும், பெருகிவரும் டிஜிட்டல் பொருளாதாரத்தில் வெற்றிபெறுவதற்குத் தேவையான திறன்களை மாணவர்களுக்கு வழங்குவதற்கும் இலங்கை மேற்கொள்ளும் பிரயத்தனங்களுக்கு இம்முன்முயற்சி உதவி செய்கிறது எனக் குறிப்பிட்டு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கபில செனவிரத்ன இவ்வொத்துழைப்பினை வரவேற்றார்.
பேராசிரியர் பட்டாச்சார்யாவின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கையிலுள்ள 18 அரச பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகளையும், கொள்கை வகுப்பாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொழிற்துறைத் தலைவர்களையும் இந்நிகழ்ச்சித்திட்டம் ஒன்றிணைத்தது.
இதன் விளைவாக உருவாகும் கொள்கைக் கட்டமைப்பானது, கற்பித்தல், கற்றல், ஆராய்ச்சி மற்றும் பல்கலைக்கழக நிர்வாகம் ஆகியவற்றில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பது குறித்த வழிகாட்டுதலை வழங்குகிறது.
அமெரிக்க தொழிநுட்ப நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் பங்காண்மைகளுக்கான நீண்டகால வாய்ப்புகளையும் உருவாக்கி, உயர்கல்வித் துறையில் இலங்கையின் செயற்கை நுண்ணறிவு அபிவிருத்தியின் அடித்தளத்தில் அமெரிக்க அணுகுமுறைகளையும் தராதரங்களையும் இது நிலைநிறுத்துகிறது.
உயர்கல்விக்கான தேசிய செயற்கை நுண்ணறிவு கொள்கைக் கட்டமைப்பானது ஜூன் மாதத்தில் இறுதி செய்யப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படுவதற்காக இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கு விநியோகிக்கப்படும்.
வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் முன்னணியிலிருப்பதற்கும், அமெரிக்க புத்தாக்கமானது உலகத் தராதரங்களைத் தொடர்ந்து வடிவமைப்பதை உறுதி செய்வதற்கும் அமெரிக்கா கொண்டுள்ள உறுதிப்பாட்டினை இம்முயற்சி அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இது வெளிநாடுகளில் பங்காண்மைகளை பலப்படுத்தும் அதேவேளை, உள்நாட்டில் பொருளாதார வாய்ப்புகளையும் ஊக்குவிக்கிறது.
பேராசிரியர் உஸ்ரி பட்டாச்சார்யா, ஜோர்ஜியா பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியராகவும், கல்வித்துறையில் பொறுப்பான செயற்கை நுண்ணறிவு தொடர்பான அங்கீகரிக்கப்பட்ட ஒரு தலைவராகவும் திகழ்கிறார்.
UGAஇன் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் பணியாற்றுவதுடன், ஜோர்ஜியாவில் இடம்பெறும் கல்விக் கட்டமைப்புகளுக்கான நெறிமுறை சார்ந்த செயற்கை நுண்ணறிவு வழிகாட்டல்களை உருவாக்குவதற்கான மாநில அளவிலான முயற்சிகளுக்கும் அவர் பங்களிப்புச் செய்துள்ளார்.
இதற்கு முன்பு ஆங்கில மொழிக் கல்வியில் செயற்கை நுண்ணறிவினை ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகளுக்கு உதவி செய்வதற்காக 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் அவர் இலங்கைக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.








