திருகோணமலை – ஹபரணை வீதியில் கார் – மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து: இருவர் காயம்

திருகோணமலை – ஹபரணை வீதியில் கார் மற்றும் உயர் ரக ரேசிங் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்ததுடன் இருவர் காயமடைந்து கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து நேற்று (22) புதன்கிழமை மாலை, ஹபரணை வீதியின் கித்துலூத்து 147ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துக்குள்ளான காரில் இந்தியாவில் இருந்து வருகை தந்த கணவன், மனைவி ஆகியோர் பயணித்துள்ளனர். இதில் கணவர் காயமடைந்த நிலையில் கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மனைவி சிகிச்சையின் பின்னர் விடுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை, விபத்தில் சிக்கிய உயர் ரக ரேசிங் மோட்டார் சைக்கிள் பல துண்டுகளாகச் சிதறி தீப்பற்றி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்தவரும் படுகாயமடைந்த நிலையில் கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்துக்கான காரணம் தொடர்பில் கல்லோயா பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.