தேசிய வீடமைப்பு ஆணையாளராக சிரேஷ்ட சட்டத்தரணி காமினி பெரேரா கடமைகளை பொறுப்பேற்பு

தேசிய வீடமைப்பு ஆணையாளராக சிரேஷ்ட சட்டத்தரணி காமினி பெரேரா இன்று வெள்ளிக்கிழமை (14) பத்தரமுல்லை செத்சிறிபாயவில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் வளாகத்தில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இங்கு சமய அனுஷ்டானங்களை அத்துல்கோட்டே ஸ்ரீ பரகும்ப பிரிவேனவின் கலாநிதி உடுகலகண்டே ஆரியரதன தேரர் மற்றும் அதே பிரிவேனவைச் சேர்ந்த ரிதிபெடிஎல்லே பஞ்சாசர தேரர் ஆகியோர் நிகழ்த்தினர்.

30 வருடங்களாக சட்டத்தரணியாக கடமையாற்றிவரும் காமினி பெரேரா உச்ச நீதிமன்ற சட்டத்தரணி ஆவார்.

அவர் அமெரிக்க சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினராகவும் உள்ளார். மனித உரிமைகள் மையத்தின் பணிப்பாளராகவும், மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளராகவும் (போக்குவரத்து) பதவி வகித்துள்ளார்.

அத்தோடு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள ஓஷன்வியூ டெவலப்மென்ட் நிறுவனத்தின் இயக்குநராக பணிபுரிந்துள்ளார்.

தேசிய வீடமைப்பு ஆணையாளர் கடமைகளை பொறுப்பேற்கும் இந்நிகழ்வில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்யானந்த, பணிப்பாளர் நாயகம் (திட்டமிடல்) அனோமா விஜேரத்ன, பணிப்பாளர் நாயகம் (பொறியியல் சேவைகள்) வஜிர அபேவர்தன மற்றும் அதிகாரிகள் குழுவினர் கலந்துகொண்டனர்.