சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் உதவிப் பேராசிரியராக பணி யாற்றி வந்தவர் பாலமுத்து முருகன். இவர் கடந்த 2017-ம் ஆண்டு கும்மிடிப் பூண்டி பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, எதிர்திசையில் வேகமாகவும், கவனக்குறைவாகவும் வந்த புதிய இருசக்கர வாகனம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் பாலமுத்து முருகன் படுகாயமடைந்து உயிரிழந்தார்.
இதையடுத்து தனது கணவரின் மறைவுக்கு ரூ.53 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரி பாலமுத்து முருகனின் மனைவி, குழந்தைகள் மற்றும் தாய் ஆகியோர் சென்னை மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தர்மபிரபு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.97 லட்சத்து 18 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மேலும், புதிய வாகனத்துக்கு குறைந்த பட்சம் தற்காலிக பதிவு கூட பெறாமல் பொது சாலையில் இயக்க அனுமதித்த வாகன டீலருக்கும் இந்த விபத்தில் இழப்பீடு வழங்க வேண்டிய பொறுப்பு உள்ளது என்று சுட்டிக்காட்டிய நீதிபதி, கணக்கிடப்பட்ட இழப்பீட்டு தொகையை வாகன உரிமையாளரும், சம்பந்தப்பட்ட டீலரும் இணைந்து ஒரு மாதத்துக்குள் மனுதாரர்களுக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.



