நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீட்டுத் தொகுதியில் மர்மநபர்

மாதிவெலயில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் வீட்டுத் தொகுதியிலுள்ள எம்.பி ஒருவரின் வீட்டிற்கு முன்பாக  சந்தேகத்துக்கு இடமான முறையிலும் நடந்துகொண்டதாகக் கூறப்படும் நபர் தொடர்பில் காவல் துறையினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உறுப்பினர் காலையில் எழுந்து வீட்டுக்கு வெளியே வந்த போது, அங்கிருந்து ​​சந்தேக நபர் தப்பிச் சென்றதாக தகவல் கிடைத்ததாக, பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பாராளுமன்ற படைக்கலச் சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ வினவிய போது, ​​இந்த சம்பவம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இச்சம்பவத்தின் பின்னர் உறுப்பினர் வீட்டுக்கு அருகிலுள்ள வீடொன்றில் தங்கியிருந்த இராணுவ அதிகாரிகள் குழுவொன்று அதே வீட்டுத் தொகுதியில் உள்ள மற்றுமோர் இடத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இராணுவ அதிகாரிகள் குழு மாதிவெலவில் வசிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களின் குடியிருப்பு வளாகத்துக்கு பாதுகாப்பு கடமைகளுக்காக கடந்த போராட்டத்தின் போது களமிறங்கியவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

எனினும்,  மாதிவெலவில் உள்ள  பாராளுமன்ற உறுப்பினர்களின் உத்தியோகபூர்வ வீட்டுத் தொகுதியில் இருந்து இந்த இராணுவத்தினரை அகற்றுவதற்கான உத்தரவு இன்னும் கிடைக்கப்பெறவில்லை என நரேந்திர பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.