பல திருட்டுக்களுடன் தொடர்புடைய ஆலயமொன்றின் பூசகர் அலவத்துகொடவில் கைது

பெறுமதியான சிலைகள்,  கைத்தொலைபேசிகள்,  மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பல பொருட்களை திருடிய ஆலயம்  ஒன்றின் பூசகர் ஒருவர் அலவத்துகொட  பகுதியில் பொலிஸாரினால் கைது  செய்யப்பட்டுள்ளார்.

வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  மோட்டார் சைக்கிள் திருடப்பட்டமை  தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் குறித்த ஆலய பூசகர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

அலவத்துகொட, அரம்பேபொல பிரதேசத்தில் வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த மோட்டார் சைக்கிள் கடந்த ஜூன் மாதம் 18 ஆம் திகதி இரவு திருடப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப் பெற்ற  நிலையில் கடந்த 21 ஆம் திகதி வத்தேகம பிடியேகெதர பகுதியில் இந்த மோட்டார் சைக்கிள் கைவிடப்பட்ட நிலையில்  மீட்கப்பட்டுள்ளது.

சிசிரிவி காட்சிகள் மூலம் அடையாளம் காணப்பட்ட குறித்த நபர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரனைகளில் அவர் அந்தப் பகுதியின் ஆலயம் ஒன்றை  நடத்தி வருபவர் என்பது பொலிஸாருக்கு தெரியவந்தது . அதன் பின்னர்  அவரை கைது செய்துள்ளனர் .

இந்த விடயம் தொடர்பில் அவரை விசாரித்தபோது பகமூன களுகங்கை வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம்  மற்றும் மாத்தளை அலுவிஹாரே பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து  கையடக்கதொலைபேசிகளையும் , லக்கல பிரதேசத்தில் உள்ள பத்தினி ஆலயத்தில் இருந்து பெறுமதியான இரண்டு பத்தினி தெய்வச் சிலைகளையும் தெஹியத்தகண்டிய பிரதேசத்தில்   நீலமாணிக்ககல்லையும் திருடியமை தெரிய வந்துள்ளது.