முல்லைத்தீவு – வவுனியா மார்க்கத்தில் பயணிக்கும் தனியார் பஸ்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் அறவிடப்படுவதாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து, குறித்த பஸ் நடத்துனருக்கு உடனடியாகத் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன், கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
குறித்த மார்க்கத்தில் பயணிக்கும் சில தனியார் பஸ்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் பணத்துக்கு பற்றுச்சீட்டுகளை வழங்குவதில்லை எனவும், மீதிப் பணம் உரிய முறையில் பயணிகளுக்குத் திருப்பியளிக்கப்படுவதில்லை எனவும் அதிகார சபைக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக, நெடுங்கேணி – வவுனியா பயணத்துக்கான நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலான கட்டணம் அறவிடப்படுவதாக ஆதாரத்துடன் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இந்த முறைப்பாடு கிடைக்கப்பெற்றதையடுத்து, அதிகார சபையால் உடனடியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது, சம்பந்தப்பட்ட பஸ் நடத்துனர் விசாரிக்கப்பட்டதில் அவர் அதிக கட்டணம் அறவிட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். இதற்கு அமைவாக அவருக்கு உடனடியாகத் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் புதிதாக நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களுக்கு அமைவாகவே பணத்தைப் பெற்று அதற்கான பற்றுச்சீட்டை வழங்க வேண்டும். இவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விடக் கூடுதலான கட்டணம் அறவிடுபவர்களுக்கு எதிராகவும், பயணிகளுக்குப் பற்றுச்சீட்டு வழங்காதவர்களுக்கு எதிராகவும் இனிவரும் காலங்களில் மிகவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகார சபைத் தலைவர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதேவேளை, பொதுப் போக்குவரத்தின்போது பயணிகள் சேவையில் ஈடுபடும் தரப்பினரால் முறைகேடுகள் இடம்பெற்றாலோ அல்லது அதிக கட்டணம் அறவிடப்பட்டாலோ, பொதுமக்கள் தகுந்த ஆதாரங்களுடன் (பயணச்சீட்டு, ஒளிப்படங்கள் அல்லது காணொலிகள்) அதிகார சபையின் 071 9090900 என்ற வட்ஸ்அப் இலக்கத்துக்கு உடனடியாகத் தெரியப்படுத்த முடியும் என அதிகார சபை மீண்டும் வலியுறுத்துகின்றது.




