யாழ். வேலணையில் “ஐஸ்” தொழிற்சாலை ; கடற்றொழில் அமைச்சர் கள விஜயம்

யாழ்ப்பாணம் வேலணை பகுதியில் ஜப்பான் நாட்டு உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு வரும் நவீன “ஐஸ்” தொழிற்சாலையின் கட்டுமானப் பணிகள், தொழில்நுட்ப ஏற்பாடுகள் மற்றும் முன்னேற்ற நிலைமைகள் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

அது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,

தீவகக் கடற்றொழிலாளர்களின் நீண்டகால தேவையாக இருந்த ஐஸ் வசதியை உறுதிப்படுத்தும் முக்கிய முயற்சியாக, எமது வேண்டுகோளுக்கிணங்க ஜப்பான் அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் வேலனை பகுதியில் நவீன ஐஸ் தொழிற்சாலை அமைக்கும் பணிகள் தற்போது துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தத் திட்டம் நிறைவேறுவதன் மூலம் தீவகப் பகுதிகளுக்குத் தேவையான ஐஸ் உள்ளூரிலேயே பெற்றுக்கொள்ளும் வசதி உருவாகும். இதனால் மீன்களின் தரமான சேமிப்பு, பாதுகாப்பான போக்குவரத்து மற்றும் சிறந்த சந்தைப்படுத்தல் நடவடிக்கைகள் மேலும் வலுப்பெறும்.

அதேவேளை கடற்றொழிலாளர்களின் உற்பத்தித்திறன், வருமானம் மற்றும் தொழில்சார் நிலைத்தன்மையும் கணிசமாக உயர்வடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தீவக மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்துக்கும், கடற்றொழில் துறையின் நிலையான அபிவிருத்திக்கும் தேவையான திட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல நாம் உறுதியாக செயற்பட்டு வருகிறோம் என மேலும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகள்