வவுனியாவில் மதுபோதையில் நண்பரை மண்வெட்டியால் தாக்கி படுகொலை

வவுனியா, கல்மடு ஈஸ்வரிபுரம் பகுதியில் தனது நண்பரை மண்வெட்டியால் தாக்கி படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் ஒருவர் இன்று (10) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நண்பர்கள் இருவர் மதுபானம் அருந்திய போது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா கல்மடு ஈஸ்வரிபுரத்தைச் சேர்ந்த வேலுசாமி நிஷாந்தன் என்ற 32 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

போதையின் உச்சத்தில் பழைய தகராறு தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக சந்தேக நபர் மண்வெட்டியால் உயிரிழந்த நபரை தாக்கியதாகவும், பலத்த காயமடைந்த நபர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கொலை நடந்த இடத்தை சோதனை செய்ததில், மதுப் போத்தல்கள், தாக்குதலுக்கு பயன்படுத்திய மண்வெட்டி மற்றும் இறந்தவரின் சில பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலையின் பின்னர் சந்தேகநபர் அப்பகுதியிலிருந்து தலைமறைவானவர் இன்றைய தினம் அதிகாலை ஈச்சங்குளம் பொலிஸில் சரணடைந்துள்ளார்.