கல்லூரி, பள்ளி பாடத்திட்டத்தில் கருணாநிதியின் சமூக நீதி வரலாறு

தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகள், பள்ளிகளில் மறைந்தமுன்னாள் முதல்வர் கருணாநிதியின் சமூக நீதி வரலாறு பாடத்திட்டமாக இணைக்கப்படும் என்றுஅமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ‘ சமூக நீதிக்காவலர்- கலைஞர்’ என்ற தலைப்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி கூறியதாவது: சமூகநீதிக்காக கருணாநிதி ஆற்றியதொண்டுகள் குறித்து சமூகம்,அரசியல் ரீதியாகவும் மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்லும் நோக்கில், இந்த சமூக நீதிக்குழுவை முதல்வர்உருவாக்கியுள்ளார்.

கருணாநிதியைப் பொறுத்தவரை சட்டம், சமூக ரீதியாக சமூக நீதிக்கு போராடியது சாதாரணமானதல்ல. அவரைப்பற்றி மாணவர்கள் மத்தியில் எடுத்துச்சொல்வது குறித்து பல்வேறுகருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து கல்லூரிகள், பள்ளிகளில் கருணாநிதியின் சமூக நீதிவரலாறு பாடத்திட்டமாக இணைக்கப்படும். இதற்கான பாடபுத்தகங்கள் உருவாக்க வேண்டும் என்றுஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறையுடன் ஆலோசனை நடத்த உள்ளோம். கல்லூரிகள், பள்ளிகளில் இது தொடர்பான கட்டுரை, கவிதைப் போட்டிகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடத்த முடிவெடுத்துள்ளோம்.

சமூக நீதி தத்துவத்தைப் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும். பெண்ணுரிமை, மாற்றுத் திறனாளிகளுடைய உரிமை அனைத்தையும் இணைத்து இளைஞர்களுக்கு அதைத் தெரிவிக்கவேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார். அமைச்சர் பொன்முடி தலைமையிலான இக்கூட்டத்தில், அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மதிவேந்தன் பங்கேற்றனர்.