தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்! -வைகோ

தமிழகத்தில் அனைத்துக் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் நிகழ்வு தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என சட்டப்பேரவையில் இன்று முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் தனித் தீர்மானம் கொண்டு வந்து ஒருமனதாக  நிறைவேற்றி இருப்பது வரவேற்கத்தக்கது;

சட்டப்பேரவையில் இத்தீர்மானத்தை கொண்டு வந்து உரையாற்றிய முதலமைச்சர்,

முதன் முதலில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஆட்சிக் காலத்தில், மனோன்மணீயம் சுந்தரனார்  அவர்களால் 1891-இல் எழுதப்பட்ட ‘மனோன்மணீயம்’ எனும் நாடக நூலின் பாயிரத்திலிருந்து எடுக்கப்பட்ட ‘தமிழ்த்தாய் வாழ்த்து’, 1970 நவம்பர் 23-ஆம் தேதி முதல் அரசு விழாக்களில் முதலில் பாடப்பட வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது என்பதையும்,

கடந்த திமுக ஆட்சியில்  2021 டிசம்பர் 12-ஆம் தேதி முதல் மாநிலப் பாடலாக அதிகாரபூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

தமிழ்நாடு ஆளுநர் அர்லேகர், ஒன்றிய பாஜக அரசின் செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் ‘வந்தே மாதரம்’ பாடலை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் முதலில் பாடச் செய்தது தமிழ் மக்களுக்கு விடப்பட்ட அறைகூவல் ஆகும்.

தேசிய இனங்களின் மொழி உரிமையைப் பறித்து ஆர்.எஸ்.எஸ் இன் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என்ற கோட்பாட்டை நிலைநிறுத்தி இந்துராஷ்டரத்துக்கு அடித்தளம் அமைக்க வந்தே மாதரம் பாடலை திணிப்பதற்கு ஒன்றிய பாஜக அரசு உத்தரவிட்டிருக்கிறது.

இந்தியா என்பது தனித்தனி தேசிய இனங்களின் கூட்டமைப்பு என்பதை டெல்லி ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு தமிழ் தாய் வாழ்த்து பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி இருப்பது பாராட்டுக்குரியது.