பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கு.. 9 மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருபுவனம் தூண்டில் விநாயகம் பேட்டையைச் சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 45). இவர் திருபுவனம் முன்னாள் நகர பா.ம.க. செயலாளர் ஆவார். இவர், கடந்த பிப்ரவரி மாதம் 5-ந் தேதி இரவு அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். அந்தப் பகுதியில் சிலர் மதமாற்றத்தில் ஈடுபட்டதை கண்டித்த நிலையில், அவர் கொலை செய்யப்பட்டது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இந்த கொலை தொடர்பாக திருவிடைமருதூர் போலீசார் வழக்குப் பதிந்து பலரை கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டது. அவர்கள் தனியாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இந்த கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் வீடுகள் மற்றும் அவர்கள் சார்ந்த எஸ்டிபிஐ மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை எடுத்துச் சென்றனர். இந்நிலையில், ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக இன்று மீண்டும் என்ஐஏ அதிகாரிகள் சோதனையை தொடங்கி உள்ளனர். திருச்சி, விழுப்புரம், தஞ்சாவூர், நெல்லை உள்ளட்ட 9 மாவட்டங்களில், 15க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெறுகிறது.