தென்கிழக்காசிய இணையவழி மோசடி வலைப்பின்னல் முறியடிப்பு: 63 பேர் கைது!

தென்கிழக்காசிய பிராந்தியம் முழுவதும் பரந்து விரிந்து செயற்பட்டு வந்த இணையவழி மோசடி மற்றும் சட்டவிரோத மனிதக் கடத்தல் வலைப்பின்னல்களை முறியடிக்கும் நோக்கில், உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களும் சர்வதேச பொலிஸ் அமைப்புகளும் இணைந்து நடத்திய பிரமாண்ட கூட்டு நடவடிக்கையில் 63 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 14 இலட்சத்திற்கும் அதிகமான போலி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க நீதித்துறை ,எப்.பி.ஐ , அமெரிக்க இரகசிய சேவை, ரோயல் தாய்லாந்து பொலிஸார் ஆகியவற்றுடன் பிரித்தானியா, அவுஸ்திரேலியா, கனடா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளின் பொலிஸ் அமைப்புகளும் இந்த கூட்டு நடவடிக்கையில் பங்கேற்றன. இவர்களுடன் மெட்டா , மைக்ரோசாப்ட் , காயின்பேஸ்  மற்றும் ஸ்டார்லிங்க்  ஆகிய உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களும்  குறித்த இத்திட்டத்தில் கைகோர்த்திருந்தன.

மேலும் காதல் விவகாரங்கள் மூலம் ஏமாற்றுதல் , போலி முதலீட்டு மோசடிகள் மற்றும் கட்டாய உழைப்பு முகாம்கள் மூலம் நடத்தப்படும் குற்றங்களை இலக்கு வைத்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த கூட்டு அதிரடி சோதனையின் மூலம், மோசடி நடவடிக்கைகளுடன் தொடர்புடைய 14 இலட்சத்திற்கும் அதிகமான கணக்குகள், இணைய பக்கங்கள் மற்றும் குழுக்கள்  முற்றாக நீக்கப்பட்டுள்ளன. மோசடிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட சுமார் 20,000 போலி கணக்குகளை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

கிரிப்டோகரன்சி பரிமாற்ற நிறுவனமான காயின்பேஸ், இந்த குற்றவியல் வலைப்பின்னல்களுடன் தொடர்புடைய 3 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிக பெறுமதியான டிஜிட்டல் சொத்துக்களை முடக்கியுள்ளது.

மேலும் சட்டவிரோத செயல்களுக்காகப் பயன்படுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள் இணைய முனையங்களின் இணைப்புகளை ஸ்டார்லிங்க் நிறுவனங்கள் துண்டித்துள்ளது.

குறித்த இந்த நடவடிக்கை அமெரிக்க நீதித்துறையின் ‘இணைய மோசடி மைய தடுப்பு விசேட அதிரடிப்படை’ மூலம்  ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

இதற்காக வொஷிங்டன் டி.சியில் ஒரு வாரகாலமாக நடைபெற்ற புலனாய்வுத் தகவல் பகிர்வுப் பயிற்சியின் மூலம், இணையவழி மோசடிகளை நிஜ உலகக் குற்றவியல் அமைப்புகளுடன் தொடர்புபடுத்தி அதிகாரிகள் ஆதாரங்களைத் திரட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தத் தகவல்களின் அடிப்படையில், தென்கிழக்காசியாவில் புதிதாக இயங்கி வந்த பல சந்தேகத்திற்கிடமான மோசடி மையங்களின் இருப்பிடங்கள் கண்டறியப்பட்டு, மேலதிக நடவடிக்கைகளுக்காக அந்தந்த நாட்டு அதிகாரிகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் சட்ட அமுலாக்க திணைக்களகங்களுக்கும் இடையிலான இத்தகைய கூட்டு உழைப்பு, நாளுக்கு நாள் அதிநவீனமாகி வரும் எல்லை கடந்த இராஜதந்திரக் குற்றங்களை ஒடுக்குவதற்கு மிக அத்தியாவசியமானது என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. மெட்டா மற்றும் ஏனைய பங்காளிகளுடன் இணைந்து ரோயல் தாய்லாந்து பொலிஸார் மேற்கொண்ட மூன்றாவது பெரிய கூட்டு முயற்சி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.