கம்பஹா விக்கிரமாராச்சி பல்கலைக்கழகத்தின் 2 பீடங்களை தன்னிச்சையான முறையில் மூடுவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் தற்போதைய அரசாங்கமும் எடுத்துள்ள தீர்மானத்தினால் இந்த ஆண்டில் 560 மாணவர்களுக்கான பல்கலைக்கழக உயர்கல்வி வாய்ப்புகள் முற்றாக பறிக்கப்பட்டுள்ளது என்று பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் குற்றம் சுமத்தியுள்ளது.
கொழும்பில் வெள்ளிக்கிழமை (5) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய சம்மேளனத்தின் செயலாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த லங்கசிங்க,
கம்பஹா விக்கிரமாராச்சி பல்கலைக்கழகத்தின் இயங்கி வந்த 3 பீடங்களில் தொழிநுட்ப பீடம் மற்றும் சமூக அறிவியல் பீடம் ஆகிய 2 முக்கிய பீடங்களையும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தன்னிச்சையான முறையில் மூடியுள்ளது. புதிய மாணவர்கள் சேர்க்கைகான கையெட்டிலிருந்தும் இப்பீடங்களை நீக்கியுள்ளது.
பல்கலைக்கழக விரிவுரையாளர்களுடன் அல்லது முறைசார் தரப்பினருடன் எவ்வித கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளாமல் பிறக்குழுக்களுடன் இணைந்து இரகசியமான முறையில் குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளது. நாட்டை மேம்படுத்துவதாக கூறி ஆட்சியை கைப்பற்றினர். தற்போது மாணவர்களின் கல்வியை முடக்கி உயர்க்கல்வித் துறையை கடந்த ஒன்றரை வருட காலத்தில் மிக மோசமானதொரு வீழ்ச்சிப் பாதைக்கு தள்ளியுள்ளது.
பற்றாக்குறை கடந்த காலங்களில் பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக பெருமளவிலான விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில் தற்போது பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்கள் ஓய்வு பெற்றாலும், உயரிழந்தாலோ அல்லது பணியை விட்டு விலகினாலும் அந்த பணியிடங்களை நிரப்புவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அல்லது அரசாங்கம் எந்தவொரு முறையான நடவடிக்கையும் கொண்டிருக்கவில்லை.
இவ்வாறு விரிவுரையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துவரும் நிலையில் பெருமளவிலான மாணவர்களை பாடசாலைகளைப் போல பல்கலைக்கழங்களுக்குள் உள்வாங்குவது நாட்டின் இலவசக் கல்வியின் தரத்தை முற்றாக வீழ்த்திடும். கடந்த ஒன்றரை வருடங்களாக இந்தத் துறையில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து அரசாங்கத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் அனைத்தும் எவ்வித முடிவுகளும் இன்றி தோல்வியடைந்துள்ன.
அரசாங்கம் தனது தன்னிச்சையான போக்கை விட்டு கல்வியை பாதுகாப்பதற்கு உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அவ்வாறு தவறும் பட்சத்தில் புதிதாக பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களை ஏற்பதா இல்லை என்பது குறித்து விரிவுரையாளர் சங்கம் என்ற ரீதியில் கடுமையான முடிவுகளை எடுக்க நேரிடும். எதிர்வரும் காலங்களில் அரசாங்கத்துக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கைளில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும் என்றார்.





