பாகிஸ்தான் நாட்டவர் ஒருவரை மணந்த பிரான்ஸ் நாட்டுப் பெண்ணொருவர், 10 ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே அடைத்துவைக்கப்பட்டு கணவனால் கொடுமைப்படுத்தப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது.பிரான்ஸ் நாட்டவரான சில்வி யாஸ்மினா (54), அவுஸ்திரேலியாவில் வாழும்போது பாகிஸ்தான் நாட்டவர் ஒருவரை திருமணம் செய்துள்ளார்.
2003 முதல் 2014 வரை அவுஸ்திரேலியாவில் வாழ்ந்த தம்பதியர், தங்கள் இரு பிள்ளைகளுடன் பாகிஸ்தானுக்குத் திரும்பியுள்ளனர். அங்கு அவர்களுக்கு மேலும் மூன்று பிள்ளைகள் பிறந்துள்ளனர்.
பாகிஸ்தானுக்குத் திரும்பியதிலிருந்தே, தன் குடும்பத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கத் துவங்கியுள்ளார் அந்த நபர்.
மனைவி பிள்ளைகளை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்ததால் பிள்ளைகளின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அவர் மிகவும் முரடர் என்று கூறும் யாஸ்மின், தன்னையும் பிள்ளைகளையும் தினமும் உடல் ரீதியாகவும் மனோரீதியாகவும் கொடுமைப்படுத்திவந்ததாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தம்பதியரின் மகன்களில் ஒரு பையன் வீட்டை விட்டு தப்பி பொலிசில் புகாரளித்ததால் உண்மை வெளிவந்துள்ளது.
பொலிசார் அந்த பாகிஸ்தானியரின் வீட்டை சோதனையிட, மோசமான நிலையில் ஒரு அறைக்குள் அந்தப் பெண்ணும் அவரது ஐந்து பிள்ளைகளும் அடைத்துவைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது.
அவர்களுடைய உடலிலிருந்த காயங்கள், அவர்கள் நீண்ட காலமாக துன்புறுத்தப்பட்டதற்கு ஆதாரமாக விளங்குகின்றன.
யாஸ்மினாவின் கணவன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், யாஸ்மினாவையும் அவரது பிள்ளைகளையும் மீட்ட பொலிசார், அவர்களை அரசு காப்பகம் ஒன்றில் தங்கவைத்துள்ளனர்.
அவர்களை பிரான்சுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளன.




