அனுர அரசாங்கத்திற்கு எதிராக பலமான கூட்டணி தயார்

ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தற்போது மிகவும் சாதகமான மட்டத்தில் உள்ளதாகவும், சஜித் பிரேமதாசவின் தலைமையில் விரைவில் பலமான அரசியல் கூட்டணியொன்று உருவாக்கப்படும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார்.

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், இரு கட்சிகளையும் ஒன்றிணைக்கும் பொறுப்பை கட்சியின் மேலாண்மைக் குழு தலைவர் சஜித் பிரேமதாசவிடம் ஒப்படைத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆசீர்வாதத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகளுடன் அண்மையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளன.

இந்த ஒன்றிணைவானது நாட்டின் வலதுசாரி அரசியல் முகாம் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களுக்கு ஒரு புதிய எதிர்பார்ப்பை வழங்கும் என்றும், இந்த பலமான கூட்டணியைக் கண்டு அரசாங்கம் தற்போது அச்சமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சஜித் பிரேமதாசவின் தலைமைத்துவத்துடனும் ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் அனுபவத்துடனும் கட்டியெழுப்பப்படும் இந்தக் கூட்டணி, நாட்டின் தீர்மானமிக்க அரசியல் சக்தியாக மாறும் எனச் சுட்டிக்காட்டிய அவர், மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்தார்.

இத்தேர்தலில் அரசாங்கத்திற்கு எதிரான மாபெரும் மக்கள் சக்தியைத் திரட்டத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். 2026 ஆம் ஆண்டிற்கான தனது எதிர்பார்ப்புகளை முன்வைத்த பாராளுமன்ற உறுப்பினர், 2025 ஜனவரியில் இடம்பெற்ற கொள்கலன் விவகாரம், தரமற்ற மருந்து இறக்குமதி மற்றும் 6 ஆம் தர பாடப்புத்தக மொடியூலில் ஆபாச இணையதள முகவரி சேர்க்கப்பட்டமை தொடர்பில் முறையான விசாரணைகளை நடத்தி குற்றவாளிகளை அரசாங்கம் நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

அத்துடன், அனர்த்த நிலைமைகள் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டும் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியமையால் ஏற்பட்ட இழப்புகளுக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

சட்டம் அனைவருக்கும் சமமாக அமுல்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி, தற்போது தமது கட்சி உறுப்பினர்கள் விடயத்தில் சட்டத்தை அமுல்படுத்தத் தயங்குவதாகக் குற்றம் சாட்டிய அவர், பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவின் கலாநிதி பட்டச் சான்றிதழ் விவகாரம் மற்றும் உள்ளூராட்சி சபைத் தலைவர்களின் சட்டவிரோத செயற்பாடுகளைச் சுட்டிக்காட்டினார்.

மேலும், மின்சாரக் கட்டணம், எரிபொருள் விலை மற்றும் அத்தியாவசியத் துறைகள் மீதான வரிகளைக் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும், வேலையற்ற பட்டதாரிகளுக்கு வழங்கிய வாக்குறுதியின்படி 2026 ஆம் ஆண்டிற்குள் வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

எதிர்க்கட்சி என்ற ரீதியில் அரசாங்கத்திற்கு போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள போதிலும், அரசாங்கம் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாகத் தெரிவித்த ஹர்ஷன ராஜகருணா, எதிர்வரும் காலங்களில் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அரசாங்கத்திற்கு எதிராகக் கடுமையான போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாக எச்சரித்தார்.

ஒரே கொள்கையைக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் கடந்த காலத் தவறுகளைத் திருத்திக்கொண்டு புதிய பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும், தேர்தல்கள் நெருங்கும் போது இந்த ஒன்றிணைவு மேலும் வேகமடையும் என்றும் அவர் தனது உரையில் மேலும் தெரிவித்தார்.