“அதிமுகவை உடைக்க வேண்டும் என திமுக பல அவதாரம் எடுத்தபோல், பாமகவை உடைக்க எடுத்த முயற்சியை அன்புமணி தவிடு பொடியாக்கினார். அதிமுக மற்றும் பாமகவை வீழ்த்த முடியாது” என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் அதிமுக மற்றும் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி சூறாவளி தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, தனது சொந்த தொகுதியான எடப்பாடி சட்டப்பேரவை தொகுதியில் ஜலகண்டாபுரம், செட்டிமாங்குறிச்சி, எடப்பாடி, கொங்கணாபுரம் ஆகிய 4 இடங்களில் இன்று அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதனிடையே, ஜலகண்டபுரத்தில் நடந்த பிரச்சாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியுடன் பாமக தலைவர் அன்புமணி கலந்து கொண்டார்.
பிரச்சாரத்தில் பாமக தலைவர் அன்புமணி பேசியது: “தமிழகத்தில் அதிக வாக்கு வித்தியாசத்தில் பழனிசாமியை இந்த தொகுதியில் வெற்றி பெற வைக்க வேண்டும். இன்னும் 2 வாரத்தில் ஆட்சி மாற்றம் நடக்கும். எடப்பாடி பழனிசாமி முதல்வராக வருவது உறுதி.
தமிழகத்தில் உள்ள தாய்மார்கள், பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென்றால் எடப்பாடி பழனிசாமி முதல்வராக வர வேண்டும். ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் பிஜேபி வந்து விடும் என பொய் சொல்லியும், என்னையும், எடப்பாடி பழனிசாமியும் தனிநபர் விமர்சனம் செய்து, மோசமான வார்த்தை பேசினார், ஆனால் எடுபடவில்லை.
திமுகவுக்கு பயம் வந்ததால் ஓட்டுக்கு ரூ 2,000 கொடுக்கின்றனர். திமுக ஆட்சி தோல்வியடைந்து விட்டது. எங்களுடைய 30 ஆண்டுகள் கோரிக்கையான மேட்டூர் உபரிநீர் திட்டத்தை செயல்படுத்தினார். தமிழகம் முழுதும் நம் கூட்டணி வெற்றி பெறும்” என்றார் அன்புமணி.
பிரச்சாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பேசியது: “நான் முதல்வராக இருந்தபோது பிரச்சினைகளை சந்தித்ததைப் போல அன்புமணியும் பிரச்சினைகளை சந்தித்து விட்டார். இரண்டு பேரும் பிரச்சனைகள் சந்தித்து விட்டு தான் உங்களை சந்திக்கிறோம். அதிமுகவை உடைக்க வேண்டும் என திமுக பல அவதாரம் எடுத்தபோல், பாமகவை உடைக்க எடுத்த முயற்சியை அன்புமணி தவிடு பொடியாக்கினார்.
அதிமுக மற்றும் பாமகவை வீழ்த்த முடியாது. ஸ்டாலின் எண்ணம் எல்லாம் நிராசையாகிவிட்டது. அவர் கண்ட கனவு ஒன்று, நடந்தது ஒன்று. ஸ்டாலின் ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தல்தான் இந்த தேர்தல்.
ஸ்டாலின் தன்னுடைய மகனை உயர்ந்த இடத்தில் அமர்த்த வேண்டும் என நடந்து கொண்டு இருக்கிறார். மக்களின் நலனை பற்றி கவலைப் படாத முதல்வர் தான் ஸ்டாலின்.




