ஆட்சியைப் பிடிக்கவும் தக்கவைக்கவும் மக்களை ஏமாற்றும் அரசாங்கம்: எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு மக்களை ஏமாற்றியது போல், தற்போது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்காகத் தினமும் மக்களை ஏமாற்றி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஹொரவ்பொத்தானை, பிரதேசத்தில் சனிக்கிழமை (25) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன் போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

தித்வா புயல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறிய அரசாங்கம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய தீர்வுகளை வழங்காமல், அவர்களுடன் சேர்ந்து சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பதிவிட்டு விளம்பரம் தேடுவதையே செய்து வருகிறது.

விவசாயச் சேதங்கள், உயிரிழப்புகள் மற்றும் மாற்று வீடுகளுக்கான இழப்பீடுகள் இன்றி மக்கள் மேலும் நிர்கதியடைந்துள்ளனர். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு ஜனாதிபதி பதவியையும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையையும் பெற்றுத் தந்த விவசாயிகளை இன்று அரசாங்கம் அவமதித்து வருகிறது.

நெல் கிலோ ஒன்றிற்கு 150 ரூபா உத்தரவாத விலை தருவதாக வாக்குறுதியளித்துவிட்டு, தற்போது உற்பத்திச் செலவை விடக் குறைவாக கிலோவிற்கு 120 ரூபாவையே வழங்குவதால் விவசாயிகளுக்குப் பெரு நட்டம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் உர விலை, எரிபொருள் விலை உயர்வு மற்றும் யானை-மனித மோதல்களுக்கு மத்தியிலும் விவசாயிகள் நெற்செய்கை செய்த போதிலும், அரசாங்கத்தின் நெற் களஞ்சியங்கள் வெளிநாட்டு அரிசியால் நிரப்பப்பட்டுள்ளது. விவசாய மக்களின் உரிமைகளுக்காகத் நாம் தொடர்ந்தும் குரல் கொடுப்போம் என்றார்.

சமீபத்திய செய்திகள்