கிளிநொச்சிப் பேருந்து நிலையத்தில் இலங்கை போக்குவரத்துச் சபையின் சாரதியுடன் முரண்பாட்டில் ஈடுபட்ட விசுவமடுவிலிருந்து வவுனியா நோக்கிப் பயணிக்கும் தனியார் பேருந்துச் சாரதியொருவருக்கு இரண்டு நாட்கள் பணி இடைநிறுத்தம் செய்து வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவரும், பொறியியலாளருமான சூ.விமலேஸ்வரன் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் சனிக்கிழமை (13.06.2026) மாலை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இதுதொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையால் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக கடந்த விசேட விசாரணையொன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது பேருந்தின் சாரதியாகக் கடமையாற்றியவர் முரண்பாட்டில் ஈடுபட்டமை உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்துக் குறித்த சாரதிக்கு இரு தினங்கள் சேவையில் ஈடுபடுவதற்குப் பணி இடைநிறுத்தம் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன் பேருந்தின் உரிமையாளருக்கு எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றால் வழித்தட அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்படும் என்ற எச்சரிக்கையும் வழங்கப்பட்டுள்ளது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.





