எழுச்சிக்குயில் 2026 தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி

தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு வலுச்சேர்த்த அனைத்துக் கலைஞர்களினதும் நினைவாகத் தமிழர் நினைவேந்தல் அகவம் சுவிஸ் 11ஆவது தடவையாக நடாத்திய ‘எழுச்சிக்குயில் 2026’ தமிழீழ  எழுச்சிப்பாடற்போட்டி கடந்த மே 8, 9 சனி, ஞாயிறு இருநாள்களும் பேர்ண் மாநிலத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு வலுச்சேர்த்த கலைஞர்களுள் தமிழீழத் தேசிய மாவீரர் பணிமனை சுவிஸினால் சேகரிக்கப்பெற்று வடிவமைக்கப்பெற்ற 72 கலைஞர்களின் திருவுருவப் படங்களுக்கு வணக்கம் செலுத்தப்பட்டது.

இவ்வாண்டு முதன்முறையாக ஐரோப்பிய ரீதியில் நடைபெற்ற போட்டியில் 92 போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தனர். காந்தள், செண்பகம், வாகை, சிறுத்தை, வளர்ந்தோர், இணை என ஆறு பிரிவுகளாகப் போட்டி நடைபெற்றது. வாகை, சிறுத்தை, வளர்ந்தோர் பிரிவுகளில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற எழுவர் தெரிவுசெய்யப்பெற்று எழுச்சிக்குயில் 2026 விருதுக்கான முதலாம் சுற்றுப்போட்டி நடைபெற்றது. முதலாம் சுற்றில் பாடிய எழுவரில் அதிகூடிய புள்ளிகளைப்பெறும் நால்வர் தெரிவுசெய்யப்பெற்று எழுச்சிக்குயில் விருதுக்கான இறுதிப்போட்டி நடைபெற்றது.

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றின் தொடக்க காலம் முதல் இன்றுவரை வெளியாகிய பாடல்கள் போட்டியாளர்களால் பாடப்பெற்றன. ஐரோப்பிய நாட்டில் பிறந்து வளர்ந்த இளையவர்கள் இப்பாடல்களை உள்வாங்கிப் பாடிய விதமும் உணர்வு மிக்க வெளிப்பாடும் எல்லோரையும் மெய்சிலிர்க்க வைத்தன. போட்டியில் ஆர்வத்துடன் பங்குபற்றிய போட்டியாளர்கள், அவர்களை ஊக்கப்படுத்திய பெற்றோர்கள், பயிற்சிகளை வழங்கிய ஆசிரியர்கள் அனைவருக்கும் எமது பாராட்டுகள்.

யேர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்திருந்த நடுவர்களுக்கும் பின்னணி இசை வழங்கிய இசைக்கலைஞர்களுக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நிகழ்வு சிறப்புற உறுதுணை புரிந்த செயற்பாட்டாளர்கள், உணர்வாளர்கள் மற்றும் நிதி ஆதரவினை வழங்கிய வணிகப் பெருமக்கள் அனைவருக்கும் எமது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

பங்குபற்றிய அனைத்துப் போட்டியாளர்களையும் மனதார வாழ்த்துகிறோம். அனைத்துப் பிரிவுகளிலும் வெற்றிபெற்ற வெற்றியாளர்களுக்கும் எழுச்சிக்குயில் 2026 விருதினைத் தனதாக்கி, தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியச் சின்னம் பொறிக்கப்பெற்ற தங்கப்பதக்கத்தை வென்ற பாரதி லோகதாசன்  அவர்களுக்கும் எமது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். புலம்பெயர் நாடுகளில் வாழ்கின்ற இளையவர்கள் தமது கலையாற்றல்களை மென்மேலும் வளர்த்துக் கொள்வதோடு, அதன் ஊடாகத் தமிழீழ விடுதலைக்கு வலுச்சேர்க்க உழைக்க வேண்டும் என்றும் உரிமையோடு கேட்டுக்கொள்கிறோம்.