விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரபல பாதாள உலகக் குழுத் தலைவரான “கெஹெல்பத்தர பத்மே” வின் பிரதான துப்பாக்கிதாரியாகக் கருதப்படும் சந்தேக நபர், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
“மாட்டியா” என்று அழைக்கப்படும் பொம்புவல தேவகே சுரங்க சஞ்ஜீவ கருணாரத்ன என்ற 41-42 வயதுடைய சந்தேக நபரே நேற்று (25) வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் மலேசியாவில் வசித்து வந்த நிலையில், அங்குள்ள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட போதே குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டார்.
கொடுகொட, யாகொடமுல்ல பகுதியைச் சேர்ந்த இந்த சந்தேக நபருக்கு எதிராக சர்வதேச பொலிஸாரினால் ‘சிவப்பு எச்சரிக்கை’ பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சந்தேக நபரான “மாட்டியா” விடம் முதற்கட்ட வாக்குமூலங்களை பதிவு செய்த பின்னர், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளுக்காக அவரை மேல் மாகாண வட பகுதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம், கம்பஹா நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் வைத்து “பாஸ் பொட்டா” எனப்படும் பாதாள உலகக் குழு உறுப்பினர் உட்பட பலரைச் சுட்டுக் கொலை செய்தமை மற்றும் மேலும் பலரைக் காயப்படுத்திய சம்பவங்களுடன் இவருக்கு நேரடித் தொடர்பு இருப்பதாகப் பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.
சந்தேக நபரை 72 மணித்தியாலங்கள் தடுப்புக் காவலில் வைத்து தீவிர விசாரணைக்கு உட்படுத்துவதற்கான அனுமதியைப் பொலிஸார் நீதிமன்றில் பெற்ற பின்னரே அடுத்தகட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.




