சாய்ந்தமருது பிரகடனம் சட்ட ரீதியானது என கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (7) வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
2 மாதங்களில் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டு, அதன் பின்னர் கல்முனை மாநகர சபை மற்றும் சாய்ந்தமருது நகர சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த வழக்கில் எதிர் மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் தெரிவித்ததாவது,
கல்முனை சாய்ந்தமருது மக்களுக்கு கிடைக்கப்பெற்ற சரித்திரம் வாய்ந்த தீர்ப்பாக கருத வேண்டும்.
இரண்டு மாத காலத்தினுள் எல்லை மீள் நிர்ணயம் செய்யப்பட வேண்டும் எனவும் அதிலும் சாய்ந்தமருது நகர சபைக்கான எல்லை மீள் நிர்ணயமும் மற்றையது கல்முனை பகுதிக்கான எல்லையும் மீள் நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இதில் 03 உள்ளுராட்சி மன்றங்கள் உருவாக்கப்பட வேண்டும் என நானும் வாதாடினேன். ஆனால் உரிய மாகாண சபை அமைச்சருக்கும் எல்லை மீள் நிர்ணயம் செய்யும் ஆணைக்குழுவும் செய்ய வேண்டிய விடயம் என மன்று சுட்டிக்காட்டியது. 02 மாதத்தின் பின்னர் சம்பந்தப்பட்ட தரப்பினர் எல்லை நிர்ணயம் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
அதன் பின்னர் ஜனாதிபதியின் கையொப்பத்துடன் அதிவிசேட வர்த்தமானியில் அறிவிக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டது.இதனை நாங்கள் உண்மையில் வரவேற்கின்றோம்.இது தவிர தற்போது சாய்ந்தமருது நகர சபை மற்றும் கல்முனை மாநகர சபைக்கான தேர்தல் தற்போது நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஏனெனில் இரண்டு சபைக்குமான எல்லை நிர்ணயம் செய்யப்படவில்லை.ஆனால் இந்த இரண்டு மாதத்தினுள் எல்லை நிர்ணயத்தை மேற்கொண்டு ஜனாதிபதிக்கு இது தொடர்பில் அறிவித்து அதன் பின்னர் தான் தேர்தல் நடாத்துவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றதை உணர்வதாக குறிப்பிட்டார்.



