சுனில் செனவி தெரிவித்த கருத்தை உடன் வாபஸ் பெற வேண்டும்: இலங்கை இந்துசமயத் தொண்டர் சபை

வவுனியா வெடுக்குநாறி மலையில் காணப்படும் தடயங்கள் அனைத்தும் பௌத்தத்துக்குரியது எனத் தெரிவித்தது மட்டுமல்ல விரைவில் வர்த்தமானிப்படுத்தப்படும் எனவும் பௌத்த சாசன அமைச்சர் சுனில் செனவி தெரிவித்த கருத்துக்கு இலங்கை இந்துசமயத் தொண்டர் சபை கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. அமைச்சர் வெளியிட்ட கருத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் எனவும் இலங்கை இந்துசமயத் தொண்டர் சபை வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் இலங்கை இந்துசமயத் தொண்டர் சபையினர் வியாழக்கிழமை (16.04.2026) இரவு கண்டன அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.  

அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வெடுக்குநாறி மலை தொடர்பாகப் பௌத்த சாசன அமைச்சர் சுனில் செனவி வியாழக்கிழமை (09.04.2026)  நாடாளுமன்றத்தில் வெளியிட்ட கருத்துக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.

வெடுக்குநாறிமலை என்பது தமிழர்களின்  பாரம்பரிய வழிபாட்டுத் தளமாக நீண்டகாலமாக இருந்து வருகின்றது. இங்கு வழிபாட்டு முறைமை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயமாக நீண்ட காலமாகச் சைவசமயத்தவர்களால் வழிபாடு நடாத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அப் பகுதி மக்களின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் தொடர்ச்சியான ஆன்மீகச் செயல்பாடுகள் இதனை உறுதிப்படுத்துகின்றன. இவ்வாறான சூழலில் எந்தவிதப் பரந்த ஆய்வும் இல்லாமல் ஒருதலைப்பட்சமாக இத் தளம் பௌத்த மதத்தினருக்குரியது என அறிவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாததாகும். இந்த ஆட்சியாளர்கள் இதன்மூலம் மிகத் தெளிவாகத் தமது இனவாத, மதவாதப் போக்கினைக் கடைப்பிடிக்கிறார்கள் என்பதற்கு இதைவிட ஆதாரம் தேவையில்லை. இது மிக மோசமான அதிகார துஷ்பிரயோகமாகும். இதனால், இன முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும்.

இத்தகைய அறிவிப்புக்கள் வரலாற்று உண்மைகளை மறைக்கும் முயற்சியாகும்.  தமிழ்மக்களினது மத மற்றும் கலாச்சார உரிமைகளை மீறும் செயலாகும். சமூக நல்லிணக்கத்தைப் பாதிக்கும் அபாயத்தை ஏற்படுத்தும். பல இன, பல மத மக்கள் இணைந்து வாழும் நாட்டில் பொறுப்பான பதவியிலுள்ளவர்கள் சம நிலையுடனும், நியாயத்துடனும் கருத்து வெளியிட வேண்டும். எந்தவொரு சமூகம் அல்லது மதத்தினரின் உரிமைகளையும் புறக்கணிக்கும் நடவடிக்கைகள் எதிர்காலத்தில் பெரும்

பாதிப்புக்களை உருவாக்கக் கூடும்.

வெடுக்குநாறிமலை தொடர்பாகச் சுயாதீன மற்றும் உண்மையான விஞ்ஞான ரீதியான ஆய்வு நடத்தப்பட வேண்டும். அப் பகுதி மக்களின் வரலாற்று மற்றும் வழிபாட்டு உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.  இவ்விடயத்தில் நீதியும், சமத்துவமும் நிலைநிறுத்தப்பட வேண்டும் எனவும் அந்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.