உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் போது கிடைத்த சாட்சியங்களின் அடிப்படையிலேயே சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார் என பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் உண்மைகளை கண்டறிவோம் என்று நாம் தேர்தல் காலத்தில் மக்களுக்கு வாக்குறுதியளித்திருந்தோம். அந்த வாக்குறுதிகளின் அடிப்படையில் விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விசாரணைகளின் ஊடாக கிடைத்த சாட்சியங்களின் அடிப்படையிலேயே தேசிய புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
எனவே, விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதே அவரின் பொறுப்பு. எனினும், ஒரு சில சந்தர்ப்பங்களில் அவர் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதை தவிர்த்துள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தை வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளும் ஒரு சிலர், புறக்கோட்டை தொடருந்து நிலையத்திற்கு அருகில் இருந்து சலேவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். எனினும், காலப்போக்கில் அது காணாமல் போய் விட்டது.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டியது அவசியம். எனவே, விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுப்பதே சலே செய்ய வேண்டிய கடமையாகும்.
சுரேஷ் சலே மீது மனிதாபிமானமற்ற முறையில் சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சலேயை 5 விசேட வைத்திய நிபுணர்கள் பரிசோதித்து சிகிச்சை அளித்துள்ளனர்.
அத்துடன் நீதவான் முன்னிலையில் அவர் பல முறை முன்னிலையாகியிருந்தார். அவ்வாறான சந்தர்ப்பங்களில் எல்லாம் இவ்வாறு அவர் சித்திரவதைக்கு உள்ளானதாக தெரிவிக்கவில்லை.
எனினும், எதிர்க்கட்சியினர் சுரேஷ் சலேவுக்கு எதிராக பல சித்திரவதைகள் கட்டவிழ்த்து விடப்பட்டதாக பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இது போன்று எவ்வித இடையூறுகள் வந்தாலும் உயிர்தத ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தடையின்றி மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்டுள்ளார்.





