முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயை விடுவித்து அவருக்கான நீதியை நிலைநாட்டுவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என பெங்கமுவே நாலக தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை (17) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு ஆதரவாகவும், அவருக்குப் பக்கச்சார்பாகவும் இந்த வழக்கில் இடையீட்டு மனுதாரர்களாக கலந்துகொள்வதற்காக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நாங்கள் நாள் முழுவதையும் செலவிட்டோம்.
இந்த மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே என்பவர் நாடறியாத, ஆனால் இந்த நாடு கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய ஒரு சிறந்த புலனாய்வு அதிகாரி ஆவார். புலனாய்வு அதிகாரிகளின் இயல்பு என்னவென்றால், அவர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதில்லை. ஆனால், எதிர்காலத்தில் இந்த நாடு பாதுகாக்கப்பட வேண்டுமானால், இவ்வாறான புலனாய்வு அதிகாரிகள் இருக்க வேண்டும்.
ஷானி அபேசேகர, ரவி செனவிரத்ன, திலீப பீரிஸ் போன்றவர்களுக்கு இந்த நாட்டைப் பாதுகாக்க வேண்டும் என்ற எந்தவொரு தேவையும் இல்லை. நாட்டின் எதிர்காலப் பாதுகாப்புப் பற்றிய அக்கறையும் அவர்களுக்குக் கிடையாது.
அவர்கள் முன்வந்து இந்த சுரேஷ் சலே போன்றவர்களுக்கு ஒரு பெரும் தீங்கை விளைவிப்பதற்கே தற்போது முயற்சிக்கிறார்கள்.
அதனைத் தடுப்பதற்குத்தான் நாங்கள் முயற்சிக்கிறோம். இறுதியில் அவர்கள் தோற்பார்கள், நாங்கள் வெற்றியடைவோம் என்ற பலத்த நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
இன்று ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்தன மிகவும் திறமையான முறையில் காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் நீதிமன்றத்தில் கருத்துகளை முன்வைத்தார்.
அதற்கமைய, நீதிமன்றம் இந்த வழக்கை ஆகஸ்ட் மாதம் 4 ஆம், 6 ஆம் மற்றும் 21 ஆம் திகதிகளுக்கு ஒத்திவைத்துள்ளது. அந்த வழக்குத் தவணைகளின் போது எங்களது எதிர்பார்ப்பு நிறைவேறி, சுரேஷ் சலே விடுவிக்கப்பட்டு, அவருக்குரிய நீதி நிலைநாட்டப்படுவதற்கான வழி பிறக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றார்





