நெல்லுக்கான நியாயமான நிர்ணய விலையை அரசாங்கம் அறிவிக்க வலியுறுத்திக் கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் இன்று செவ்வாய்க்கிழமை (16.06.2026) கவனயீர்ப்புப் பேரணியொன்றை முன்னெடுத்தனர். கிளிநொச்சி நகரிலுள்ள சித்தி விநாயகர் ஆலய முன்றலிலிருந்து ஆரம்பமான பேரணி கிளிநொச்சி மாவட்டச் செயலகம் வரை முன்னெடுக்கப்பட்டது.
நெல் உற்பத்திக்கான செலவுகள் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் அரசாங்கம் உரிய நிர்ணய விலையை அறிவிக்க வேண்டுமெனப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் வலியுறுத்தினர்.
போராட்டத்தின் நிறைவில் நெல்லுக்கான நிர்ணய விலையை உடனடியாக அறிவித்து நடைமுறைப்படுத்துமாறு கோரும் மகஜர் ஜனாதிபதி, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர், விவசாய அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பி வைப்பதற்காகக் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுப்பிரமணியம் முரளிதரனிடம் நேரடியாகக் கையளிக்கப்பட்டது.






