புகையிரத சேவைகளில் கடும் நெருக்கடி ஆபத்து: நிலைய அதிபர்கள் சங்கம் அவசர எச்சரிக்கை!

புகையிரத திணைக்களத்தின் வசமுள்ள புகையிரத இயந்திரங்கள் மற்றும்  இயந்திர வலு தொகுதிகள் குறைவடைந்துள்ளதன் காரணமாக,  சேவைகளில் கடுமையான நெருக்கடி ஏற்படக்கூடும்.இந்த நிலையை சீர்செய்து, தற்போதுள்ள நேர அட்டவணைக்கு அமைவாக சேவைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகையிரத நிலைய அதிபர் சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர வலியுறுத்தியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

2023ஆம் ஆண்டளவில் 106 ஆகக் காணப்பட்ட மொத்த புகையிரத இயந்திர தொகுதி இருப்பு, 3 வருடங்களின் பின்னர் இன்று 98 ஆகக் குறைவடைந்துள்ளதுடன், 8 இயந்திரங்கள் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டு நடைமுறையிலிருந்த  நேர அட்டவணையின்படி, சுமார் 450 புகையிரத சேவைகள் இயக்கப்பட்டதுடன், அந்த சேவைகளுக்காக  திணைக்களத்திற்கு 74 இயந்திரங்கள் தேவைப்பட்டிருந்தன.

இருப்பினும், அவ்வாறானதொரு எண்ணிக்கையிலான சேவைகளை இயக்குவதற்கு, அந்த காலப்பகுதியில் புகையிரத  திணைக்களத்திடம் இயக்கத்திற்கு உகந்த நிலையில் 68 இயந்திரங்கள் மாத்திரமே இருந்தன. இன்று அந்த இயந்திரங்களின் எண்ணிக்கையும் 49 ஆகக் குறைவடைந்துள்ளது.

இதேவேளை, 2023ஆம் ஆண்டளவில் திணைக்களத்திடம் 109 புகையிரத  இயந்திர வலு தொகுதிகள்  இருந்த நிலையில், இந்த ஆண்டில் அது 106 ஆகக் குறைவடைந்துள்ளது. இதன்படி, 3 இயந்திர வலு தொகுதிகள் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், தற்போதைய சேவைகளை வழங்குவதற்கு 88 புகையிரத இயந்திர வலு தொகுதிகள் அவசியமாகின்றன.

2023ஆம் ஆண்டில்  திணைக்களத்திடம் இயங்கு நிலையில் இருந்த  இயந்திர வலு தொகுதிகளின் எண்ணிக்கை 78 ஆகும். அது தற்போது 52 ஆகக் குறைவடைந்துள்ளது. இந்த சேவைகளை தடையின்றி வழங்குவதற்கு திணைக்களத்திடம் 26  இயந்திர வலு தொகுதிகளின் பற்றாக்குறை நிலவுகிறது.

இதற்கமைய, ஒட்டுமொத்தமாக 2023ஆம் ஆண்டில் 261 ஆகக் காணப்பட்ட  இயந்திரங்கள் மற்றும்  இயந்திர வலு தொகுதிகளின் மொத்த எண்ணிக்கையிலிருந்து 19 நீக்கப்பட்டு, 2026ஆம் ஆண்டளவில் அதன் மொத்த இருப்பு 242 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

எனவே, நிலவும் இப்பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.