புனரமைக்கப்பட்ட புளியம்பொக்கனை பாலம் மக்கள் பாவனைக்காக திறந்து வைப்பு!

A35 பரந்தன்–முல்லைத்தீவு பிரதான வீதியின் 12ஆவது கிலோமீற்றர் பகுதியில் அமைந்துள்ள 40 மீற்றர் நீளமுடைய புளியம்பொக்கனை பாலம், புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து  செவ்வாய்க்கிழமை (28) பொதுமக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக  திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து வருகை தந்த வீதிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர்  பிமல் ரத்நாயக்க பாலத்தை திறந்து வைத்தார்.

குறித்த பாலத்தின் புனரமைப்புப் பணிகள் 2020ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டிருந்த போதிலும், கொரோனா பெருந்தொற்று மற்றும் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.

தற்போது அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் ரூபா 206 மில்லியன் செலவில் புனரமைப்புப் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன்,  வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள், கண்டாவளை பிரதேச செயலாளர், அரச அதிகாரிகள் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு இணைப்பாளர் மருங்கன் மோகன், மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.