பேருந்து கட்டண திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

பஸ் கட்டணங்களைத் திருத்தம் செய்வதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இன்று (01) புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இந்தத் தீர்மானத்தை அறிவித்தார்.

தற்போது நடைமுறையிலுள்ள பஸ் கட்டணக் கொள்கையின் கீழ், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1ஆம் திகதி வருடாந்த பஸ் கட்டணத் திருத்தத்தை அறிவிக்க வேண்டும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

அதற்கமைய, 2026 பெப்ரவரி மாதம் முதல் மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழலால் எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான ஏற்ற இறக்கங்கள், இயக்கச் செலவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், தற்போது இயக்கப்படும் பஸ் வகைகள் மற்றும் டொலரின் மதிப்பில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற காரணிகளைக்கருத்தில் கொண்டு இந்த கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

மேலும், தற்போதுள்ள பஸ் கட்டண சூத்திரம் மற்றும் கட்டணக் கட்டமைப்பைப் புதுப்பிப்பதற்கும் திருத்துவதற்குமான விதப்புரைகளைச் சமர்ப்பிப்பதற்காக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் குழுவொன்று நியமிக்கப்பட்டது. இக்குழுவானது பஸ் உதிரிப்பாகங்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள தாக்கம், அதிவேக நெடுஞ்சாலைகளில் இயங்கும் பஸ்கள் மற்றும் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட லங்கா மெட்றோ ட்ரான்சிட் லிமிட்டெட்  நிறுவனத்தின் கீழ் இயங்கும் தாழ் தள பஸ்கள் குறித்தும் மதிப்பீடு செய்துள்ளது.

இக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், 2026 ஜூன் 30 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்த எரிபொருள் விலை திருத்தத்தையும் கருத்தில் கொண்டு, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் திருத்தப்பட்ட பஸ் கட்டணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.