கடந்த காலங்களில் நாட்டைச் சூறையாடி, ஊழல் செய்து, மக்களின் கோடிக்கணக்கான பணத்தைக் கொள்ளையடித்த திருடர் கூட்டத்தின் கூச்சல்களுக்கோ அல்லது அச்சுறுத்தல்களுக்கோ தேசிய மக்கள் சக்தி அரசு ஒருபோதும் அஞ்சப்போவதில்லை என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
இரத்தினபுரி பகுதியில் நேற்று(1.7.2026)நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “டித்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு மிகக் குறுகிய காலத்தில் நிவாரணங்களை வழங்கி வருகின்றது.
வரலாற்று ரீதியாக எந்தவொரு அரசும் இவ்வளவு விரைவாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கியதில்லை. பல வருடங்கள் கடந்தும் நீதி கிடைக்காத மக்களுக்கு எமது அரசு துரிதமாகச் செயற்பட்டு வருகின்றது.
விடுபட்ட ஏனைய மக்களுக்கும் நிவாரணங்களை விரைவாகக் கொண்டு சேர்க்குமாறு அரச அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதியும் அரசும் பொய் கூறுவதாக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் முகம் காட்டுவதற்காகவே சிலர் பேசி வருகின்றனர்.
கடந்த காலத்தில் கொள்ளையடித்து விட்டு தற்போது சிறைக்குச் செல்லத் தயாராக இருப்பவர்களே, இன்று எங்களைப் பார்த்துப் பொய் கூறுவதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.
அண்மையில் முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் மகன் சுங்கத் திணைக்களத்தை ஏமாற்றி, வரி ஏய்ப்பு செய்து இலங்கைக்கு ஆடம்பர வாகனம் ஒன்றைக் கொண்டு வந்துள்ளார் என்று ஊடகச் செய்தி ஒன்றைப் பார்த்தேன்.
இவ்வாறானவர்களே இன்று எம்மைக் குறை கூறுகின்றார்கள். அந்த முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது மகன் யார் என்பது மிக விரைவில் நாட்டுக்கு வெளிப்படுத்தப்படும் எனக் குறிப்பிட்டார்.





