யாழ். காரைநகரில் வெளிநாட்டவர்களின் நகைகள், பணங்களை திருடிய குற்றத்தில் இருவர் கைது

புலம்பெயர் நாடுகளில் இருந்து விடுமுறைகளை கழிக்க தமது சொந்த இடமான யாழ்ப்பாணம் காரைநகர் பகுதிக்கு வந்திருந்த குடும்பத்தினர்களின் வீடுகளில் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காரைநகரில் புலம்பெயர் குடும்பத்தினர் தங்கி இருந்த வீடொன்றில் 1,600 கனேடிய டொலர், ஒரு சோடி காப்பு மற்றும் கடவுச்சீட்டு என்பனவும் மற்றொரு வீட்டில் தங்கியிருந்தவர்களின்  400 அமெரிக்க டொலர், யூரோ மற்றும் ஒரு இலட்சம் ரூபா இலங்கை நாணயத்தாள்கள் என்பனவும் களவாடப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் உரிமையாளர்களால் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில், யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால், காரைநகர் பகுதியை சேர்ந்த 26 மற்றும் 27 வயதுடைய இரு இளைஞர்களை பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், குறித்த வீடுகளில் களவாடப்பட்ட பணம், நகைகள் என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை விசாரணையின் பின்னர் ஊர்காவற்துறை பொலிஸார் ஊடாக, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.