விமான நிலையத்தில் 34 இலட்சம் ரூபா பெறுமதிமிக்க புறாக்களுடன் இரு வர்த்தகர்கள் கைது

இத்தாலியிலிருந்து சட்டவிரோதமான முறையில் 34 இலட்சத்து 31 ஆயிரத்து 400 ரூபா பெறுமதிமிக்க 64 புறாக்களைப் பயணப்பொதிகளுக்குள் மறைத்து வைத்துக்கொண்டு வந்திருந்த சந்தேகநபர்கள் இருவர் சனிக்கிழமை (25) இரவுக் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சனிக்கிழமை (25) இரவு பயணிகள் வருகை முனையத்தி பயனிகளுக்கான கிரின் சேனல் வழியாக  விமான நிலையத்திலிருந்து வெளியேற முற்பட்ட சந்தேகத்துக்கு இடமான இரு பயணிகளை அதிகாரிகள் தடுத்து நிறுத்திச் சோதனையிட்டுள்ளனர். இதன்போது, சந்தேகநபர்களின் 6 பயணப்பொதிகளுக்குள் சிறிய இரும்புக் கூண்டுகளில் அடைத்து மறைத்து வைக்கப்பட்டிருந்த 64 புறாக்களை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட புறாக்கள் சுமார் 34 இலட்சத்து 31 ஆயிரத்து 400 ரூபா பெறுமதிமிக்கவை எனச் சுங்க அதிகாரிகளால் மதிப்பிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் வென்னப்புவை  பகுதியை சேர்ந்த 30 வயதுடைய, செல்லப்பிராணிகள் விற்பனை நிலையங்களை நடத்தி வரும் இரு வர்த்தகர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இப்புறாக்களை இத்தாலியில் கொள்வனவு செய்து, துபாய்க்கு வருகை தந்து அங்கிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தைச் வந்தடைந்துள்ளனர்.  கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், விசாரணைகளின் பின்னர் இப்புறாக்களை மீண்டும் இத்தாலிக்குத் திருப்பி அனுப்புவதுக்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.