ஹாலிஎல , உனுகொல்ல தோட்ட இளைஞர் தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு ; சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாக தகவல்!

பதுளை மாவட்டத்தின் ஹாலிஎல உனுகொல்ல தோட்டத்தில், இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படும் சம்பவம் தொடர்பில் பரபரப்பு நிலவி வருகிறது.

மல்வத்தவெளி பிளான்டேஷன் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் குறித்த தோட்டத்தைச் சேர்ந்த இளைஞர், கடந்த வெள்ளிக்கிழமை (17) முகாமையாளர் அலுவலகத்தில் முகாமையாளரால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுயதொழில் ஒன்றைப் பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தில் கையொப்பம் பெறுவதற்காக அந்த அலுவலகத்துக்குச் சென்றபோதே இந்த தாக்குதல் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தைக் கண்டித்து தோட்டப் பொதுமக்கள், இளைஞர்கள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் தொடர் கவனயீர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனையடுத்து, மலையக மக்கள் முன்னணியின் உப தலைவர் மற்றும் பதுளை மாவட்ட அமைப்பாளர் பகி பாலச்சந்திரனின் வேண்டுகோளுக்கிணங்க, அவரது பிரத்தியேக செயலாளரும் மலையக தொழிலாளர் முன்னணியின் பிரதி பொதுச் செயலாளருமான ரகுராஜ் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்று பாதிக்கப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடியுள்ளனர்.

இளைஞர் தாக்கப்பட்டமை தொடர்பில், முகாமையாளருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அதற்கான முதற்கட்ட விசாரணைகள் திங்கட்கிழமை (20) நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தொழிற்சங்க ரீதியில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ரகுராஜ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பெருந்தோட்டங்களில் இதுபோன்ற சம்பவங்கள் இனியும் இடம்பெறாத வகையில் தொழிற்சங்க நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்