ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் இரண்டாம் நிலைத் தலைவர் கொல்லப்பட்டார்! – ட்ரம்ப் தகவல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உலகளாவிய அளவில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் இரண்டாம் நிலை தலைவராகக் கருதப்பட்ட அபூ-பிலால் அல்-மினுகி அமெரிக்க மற்றும் நைஜீரிய படைகளின் நடவடிக்கையில் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

ஆபிரிக்காவில் பதுங்கியிருந்த அவரைத் துல்லியமான உளவுத் தகவல்களின் அடிப்படையில் கண்டறிந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

“இன்று இரவு, எனது உத்தரவின் பேரில், வீரமான அமெரிக்கப் படைகளும் நைஜீரிய ஆயுதப்படைகளும் மிகத் துல்லியமாக திட்டமிடப்பட்ட சிக்கலான நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டு, உலகின் மிக மோசமான பயங்கரவாதிகளில் ஒருவரை ஒழித்துள்ளன” என்று ட்ரம்ப் குறிப்பிட்டார்

“உலகளாவிய ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் இரண்டாம் நிலை தலைவரான அபூ-பிலால் அல்-மினுகி, ஆபிரிக்காவில் பதுங்கிக்கொள்ளலாம் என்று நினைத்தார். ஆனால் அவரது  செயற்பாடுகள் குறித்து தகவல் வழங்கும் உளவாளிகள் எங்களிடம் இருந்தனர் என்பது அவருக்குத் தெரியாது.

“இனி அவர் ஆபிரிக்க மக்களை அச்சுறுத்தவோ அல்லது அமெரிக்கர்களை குறிவைக்கும் தாக்குதல்களைத் திட்டமிடவோ மாட்டார்” என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.