நவீன வரலாற்றில் மிகச் சில நிகழ்வுகள் மட்டுமே மொத்த உலகையும் நம்ப முடியாமல் ஸ்தம்பிக்க வைத்துள்ளன. அதில் ஒன்று, 1997ல் ஆகஸ்டு 31 ஆம் திகதி நடந்த இளவரசி டயானாவின் மரணம்.
வேல்ஸ் இளவரசி டயானா பாரிஸ் சுரங்கப்பாதையில் விபத்தில் சிக்கி மரணமடைந்ததாக வெளியான தகவல் மொத்த உலக மக்களையும் ஸ்தம்பிக்க வைத்தது.

36 வயதான டயானா தமக்கு நெருக்கமான நண்பர் டோடி அல்-ஃபயீத்துடன் ஒரு கருப்பு நிற மெர்சிடிஸ் காரில் பயணப்பட, அந்த வாகனத்தின் சாரதியாக ரிட்ஸ் ஹொட்டல் பாதுகாப்புத் தலைவர் ஹென்றி பால் செயல்பட்டார்.
காரின் முன் இருக்கையில் மெய்க்காப்பாளர் ட்ரெவர் ரீஸ்-ஜோன்ஸ் அமர்ந்திருந்தார். ஆனால், சில நிமிடங்களுக்கு பின்னர் அந்த வாகனமானது Pont de l’Alma சுரங்கப்பாதையின் 13வது தூணில் மோதி மிக மோசமான விபத்தில் சிக்கியது.
அந்த விபத்தில், சம்பவயிடத்திலேயே சாரதி ஹென்றி பாலும் அல்-ஃபயீத்தும் மரணமடைய, மெய்க்காப்பாளர் ட்ரெவர் ரீஸ்-ஜோன்ஸ் குற்றுயிராக மீட்கப்பட்டார். சம்பவயிடத்தில் குவிந்த மருத்துவர்கள் படுகாயமடைந்திருந்த டயானாவின் உயிரைக் காப்பாற்ற முழு விச்சில் போராட,
இறுதியில் உள்ளூர் நேரப்படி விடிகாலை 4 மணிக்கு டயானாவின் உயிர் பிரிந்தது. விபத்திற்கு முன்னர் டயானாவும் அல்-ஃபயீத்தும் ரிட்ஸ் ஹொட்டலில் உணவருந்திவிட்டு வெளியேற நினைக்கையில், புகைப்படக் கலைஞர்களால் சூழப்பட்டனர்.

ஆனால், கார் புறப்பட்ட வெறும் 3 நிமிடங்களில் சுரங்கப்பாதையில் விபத்தில் சிக்கியுள்ளது. மிக ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட டயானா உடனடியாக Pitie-Salpetriere மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
ஆனால் விடிகாலையில் அவரது உயிர் பிரிந்துள்ளது. ஒரு நர்சரி உதவியாளராக தமது வாழ்க்கையை தொடங்கிருந்த டயானா, பின்னர் இளவரசியாக அறியப்பட்டு உலகின் மிகவும் பிரபலமான பெண்ணாக மாறினார்.
அவர் இறந்தபோது, உலகம் அதிர்ந்தது. கென்சிங்டன் அரண்மனைக்கு வெளியே, பிரித்தானியப் பொதுமக்கள் அதன் வாயில்களை விட உயரமாக பூக்களை அடுக்கி வைத்தனர். இப்படியான ஒரு தருணம் ராணியார் இரண்டாம் எலிசபெத்திற்கும் வாய்க்கவில்லை.
லண்டன் வீதிகளில் மில்லியன் கணக்கானவர்கள் அணிவகுத்து நின்றனர். சுமார் 2.5 பில்லியன் மக்கள் தொலைக்காட்சியில் அவரது இறுதிச் சடங்கைப் பார்த்தனர்.
1999 ல் பிரெஞ்சு விசாரணை அதிகாரிகள், ஹென்றி பால், பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை உட்கொண்டு மயக்க நிலையில் இருந்தபோது, பாப்பராசிகளால் பின்தொடரப்பட்டதை அடுத்து மெர்சிடிஸ் காரின் கட்டுப்பாட்டை இழந்ததாக முடிவு செய்தனர்.




