ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது டைட்டானிக் உயிர்காப்பு அங்கி

உலகப்புகழ் பெற்ற டைட்டானிக் கப்பல் விபத்தில் உயிர் பிழைத்தவர் பயன்படுத்திய உயிர்காப்பு அங்கி, இங்கிலாந்தில் நடைபெற்ற ஏலத்தில் சுமார் 6,70,000 பவுண்டுகளுக்கு விற்பனையாகியுள்ளது.

டைட்டானிக் கப்பல் மூழ்கி 114 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், உயிர் பிழைத்தவர் பயன்படுத்திய உயிர்காப்பு அங்கி ஒன்று ஏலத்திற்கு வருவது இதுவே முதல் முறையாகும்.

வில்ட்ஷையரில் உள்ள ‘ஹென்றி ஆல்ட்ரிட்ஜ் & சன்’ ஏல நிறுவனம் இந்த ஏலத்தை நடத்தியது.

முதலாம் வகுப்புப் பயணியான லாரா மேபெல் ஃபிரான்கடெல்லி என்பவர் இந்த உயிர்காப்பு அங்கியைப் பயன்படுத்தியுள்ளார்.

இந்த உயிர்காப்பு அங்கியில் அவர் மற்றும் அவருடன் உயிர் பிழைத்தவர்கள் தங்களது கையெழுத்துக்களை இட்டுள்ளனர்.

இது 3.5 இலட்சம் பவுண்டுகள் வரை மட்டுமே ஏலம் போகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரண்டு மடங்கு அதிக விலைக்கு விற்பனையாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதே ஏலத்தில், டைட்டானிக் கப்பலின் உயிர் காக்கும் படகில் இருந்த இருக்கை மெத்தை ஒன்று 3,90,000 பவுண்டுகளுக்கு விற்பனையானது. இதனை அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் உள்ள ‘டைட்டானிக் மியூசியம் அட்ராக்ஷன்’ நிறுவனம் வாங்கியுள்ளது. இது விரைவில் மக்கள் பார்வைக்காகக் கண்காட்சியில் வைக்கப்படவுள்ளது.

“இந்த ஏலத்தின் முடிவு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. டைட்டானிக் கதை மற்றும் அதன் பயணிகள் மீதான ஆர்வம் இன்றும் குறையாமல் இருப்பதை இது காட்டுகிறது,” என ஏலதாரர் ஆண்ட்ரூ ஆல்ட்ரிட்ஜ் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 14 ஆம் திகதி சவுத்தாம்ப்டனில் டைட்டானிக் பேரிடரின் 114-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்ட நிலையில், இந்த ஏலம் உலகளாவிய கவனத்தைப் பெற்றுள்ளது.