காட்டு யானை தாக்கியதில் வயோதிபர் உயிரிழப்பு!

அம்பாறை – மங்களகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொஹொம்பகஸ்தலாவ பகுதியில் காட்டு யானை தாக்கியதில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று சனிக்கிழமை (25) காலை  இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர் கொஹொம்பகஸ்தலாவ பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய வயோதிபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தனது வீட்டிற்கு அருகில் வந்த காட்டு யானையை விரட்டுவதற்கு முயற்சி செய்த போதே, யானை அவரைத் தாக்கியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், மங்களகம பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.