சிறிலங்கா பாதுகாப்புச் செயலாளருடன் இத்தாலியத் தூதுவர் சந்திப்பு

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான இத்தாலியத் தூதுவர் டாமியானோ பிராங்கோவிக் (Damiano Francovigh), பாதுகாப்பு அமைச்சின் வளாகத்தில் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயியகொந்தவை சந்தித்துக் கலந்துரையாடினார்.

பாதுகாப்பு அமைச்சிற்கு வருகை தந்த புதிய தூதுவரை பாதுகாப்புச் செயலாளர் வரவேற்றதுடன், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடல் மிகவும் பயனுள்ள வகையில் அமைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக, இலங்கை மற்றும் இத்தாலிக்கு இடையிலான நீண்டகாலத் தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கை மற்றும் இத்தாலிக்கு இடையே நிலவும் நீண்டகால நட்புறவு குறித்து தனது பாராட்டுக்களைத் தெரிவித்த தூதுவர் பிராங்கோவிக், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்காக இலங்கை அதிகாரிகளுடன் நெருக்கமாகப் பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் இதன்போது மீண்டும் உறுதிப்படுத்தினார்.