த.வெ.கவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்துவது அரசியலமைப்புக்கு எதிரானது – தமிழக காங்கிரஸ்

தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்துவது அரசியலமைப்புக்கு எதிராக உள்ளது என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் மேலும் பதிவிட்டுள்ளதாவது,

“கடந்த காலங்களைப் போலவே தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு ஆளுநர்களை வைத்து அரசியல் நடத்தும் ஒன்றிய பா.ஜ.க. அரசு தற்போதும் இடையூறு செய்து வருகிறது.

அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆட்சி அமைப்பதற்கு அழைப்பு விடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்துவது அரசியலமைப்புக்கு எதிராக உள்ளது.

மேலும், ஆளுநரின் செயல் உள்நோக்கம் கொண்டதாக உள்ளது.

பொறுப்பேற்றுக்கொண்ட கட்சியானது, தனிப்பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டியது சட்டமன்றத்தில் தானே தவிர, ஆளுநர் மாளிகையில் இல்லை. எனவே, உடனடியாக ஆளுநர் த.வெ.க தலைவர் விஜய் அவர்களை ஆட்சி அமைப்பதற்கு அழைக்கவேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வலியுறுத்துகிறேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.