யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், அங்கவீனமான உறவுகளுக்கும் புலம்பெயர் தமிழர்கள் உதவ முன்வரும் போது இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக உதவ வேண்டும் என காரைதீவு பிரதேச சபை தவிசாளர் எஸ். பாஸ்கரன் தெரிவித்தார்.
காரைதீவு பிரதேச சபையின் 04 வது சபையின் 11வது மாதாந்த சபைக் கூட்டம் இன்று வியாழக்கிழமை (14) மு.ப 9.30 மணிக்கு சபா மண்டபத்தில் நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 17வது ஆண்டு நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களுக்கு மௌன அஞ்சலியுடன் ஆரம்பமான சபை அமர்வில் தேசிய மக்கள் சக்தியின் பட்டியல் உறுப்பினர் எஸ். சுலட்சனாவை தவிர ஏனைய உறுப்பினர்கள் சபை அமர்வில் கலந்து கொண்டிருந்தனர்.
மாளிகைக்காடு பிரதேசத்தில் டெங்கு அடையாளம் காணப்பட்ட விடயம் தொடர்பில் உப தவிசாளர் முன்வைத்த கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு இவ்வார இறுதியில் அவற்றுக்கு தீர்வை வழங்கவும், காரைதீவு பிரதேச சபை எல்லை தொடர்பிலும் இதன்போது தவிசாளர் எஸ். பாஸ்கரன் கவனம் செலுத்தினார்.
10 வது அமர்விற்கான கூட்டறிக்கை நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து கௌரவ தவிசாளரின் பிரேரணைகள் ஆராயப்பட்டு காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட வீதிகளின் 2026ம் ஆண்டிற்கான விபரத்திரட்டைப் பெறுவதற்காக உத்தியோகத்தர் ஒருவரை நியமிப்பதற்கு சபை அனுமதி வழங்கியது.
மேலும் உறுப்பினர் மு.ந.மு.றனீஸ் அவர்களின் பிரேரணையாக முன்வைக்கப்பட்ட காரைதீவு பிரதேச சபையின் மாவடிப்பள்ளி வீதி விளக்குகளை இயக்கும் கடமையில் கடந்த 01.06.2009ம் திகதி முதல் ஈடுபடும் நபருக்கான கொடுப்பனவு தொகை அதிகரித்து ரூபா 8,000.00 வழங்குவதற்காக தீர்மானிக்கப்பட்டது.
2026 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் குறிப்பிட்ட தொகை உள்வாங்கப்படாமையினால் இத் தொகையை ரூபா 6,000.00 வழங்குவதற்கும் அடுத்த வருடத்தில் ஏற்கனவே குறிப்பிட்ட தொகையை அதிகரித்து வழங்குவதற்கும் சபை அனுமதி வழங்கியது.






