நெடுந்தீவு, ஊர்காவற்றுறை, காரைநகர் மற்றும் வேலணை ஆகிய தீவகப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் எதிர்கொள்ளும் அன்றாட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் புதன்கிழமை (27) வேலணை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் நெடுந்தீவு மக்களின் கடற்போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
‘நெடுந்தாரகை’ மற்றும் ‘வடதாரகை’ ஆகிய இரு பயணிகள் படகுகளும் திருத்தப் பணிகள் நிறைவடைந்து அடுத்த மாதம் நடுப்பகுதியில் மீண்டும் சேவைக்குத் தயாராகும் என வட பிராந்தியக் கடற்படைத் தளபதியால் தெரிவிக்கப்பட்டது.
அதுவரை, போக்குவரத்துக்காக வாடகைப் படகொன்றை அமர்த்துவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான தரநிர்ணய பரிசோதனைகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்படுவதாகவும் நெடுந்தீவு பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
அதேவேளை குறித்த கலந்துரையாடல் முடிவடைந்த பின்னர், காங்கேசன்துறை கடற்படை இறங்குதுறையில், கடற்படையினரால் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் நெடுந்தாரகை படகினை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பாராளுமன்ற உறுப்பினர் கருணாநாதன் இளங்குமரன் உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.









