ஆப்கானிஸ்தானில் லொறி கவிழ்ந்து விபத்து ; 10 சிறுவர்கள் உட்பட 18 பேர் பலி

கிழக்கு ஆப்கானிஸ்தானில் லொறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 சிறுவர்கள் உட்பட 18 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத்துக்கும் தலைநகர் காபூலுக்கும் இடையிலான வீதியில் 50க்கு மேற்பட்டோரை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த லொறியே விபத்தில் சிக்கியுள்ளது.

இந்த விபத்தில் 10 சிறுவர்கள், 5 பெண்கள், 3 ஆண்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் 29 பேர் இவ்விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

ஆப்கானிஸ்தானிலிருந்து புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் தங்குவதற்கு பாகிஸ்தானில் விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பெரும்பாலான குடும்பங்கள் தங்கள் உடைமைகளுடன் லொறிகளின் ஊடாக பயணத்தை மேற்கொண்டு பாகிஸ்தானை விட்டு வெளியேறுகின்றனர். அவ்வாறு பயணித்த லொறியொன்றே விபத்தில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து இதுவரை 447,400 ஆப்கானிஸ்தான் மக்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.