உக்ரைன் மீதான போர் இலக்குகளில் மாற்றமில்லை என அறிவிப்பு!

உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கி விடுத்த நேரடிபேச்சுவார்த்தைக்கான அழைப்பை  ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் நிராகரித்துள்ளார்.

அத்துடன், உக்ரைனின் கிழக்கு டான்பாஸ் பிராந்தியம் முழுவதையும் கைப்பற்றுவது உள்ளிட்ட ரஷ்யாவின் போர் இலக்குகளில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய  புட்டின், அமைதிப் பேச்சுவார்த்தை கோரி ஜெலன்ஸ்கி தனக்கு அனுப்பிய திறந்த கடிதத்தை “மரியாதையற்ற ஒன்று” என அறிவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை உக்ரைன் ஜனாதிபதியால்  பகிரங்கப்படுத்தப்பட்ட அந்தக் கடிதத்தில், சுவிற்சர்லாந்து அல்லது துருக்கி போன்ற ஒரு நடுநிலை நாட்டில் இருநாட்டுத் தலைவர்களும் நேரில் சந்திக்க வேண்டும் என முன்மொழியப்பட்டிருந்தது.

தற்போதைய போர்க்கள எல்லைக் கோடுகளை அடிப்படையாகக் கொண்டு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கலாம் என்றும், பேச்சுவார்த்தை நடக்கும் போது முழுமையான போர்நிறுத்தத்திற்கு உக்ரைன் தயாராக இருப்பதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது.

இது தொடர்பாக  விளாடிமிர் புட்டின்  கருத்து தெரிவிக்கையில்,

“தற்போதைக்கு இத்தகைய நேரடிச் சந்திப்பில் எனக்கு எந்தப் பயனும் இருப்பதாக தெரியவில்லை. இந்தக் கடிதத்தின் நோக்கம் என்ன? தனிப்பட்ட சந்திப்பிற்கான சூழலை உருவாக்குவதா? அல்லது அப்படி ஒரு சந்திப்பு நடந்துவிடக் கூடாது என்பதற்காக எழுதப்பட்டதா? இது இரண்டாவது நோக்கத்திற்காகவே எழுதப்பட்டுள்ளது என நான் நினைக்கிறேன். எங்கள் இராணுவ சகோதரர்கள் தங்களின் பணிகளைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.” என குறித்த மாநாட்டில் புட்டின் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

மேலும், ரஷ்யா தற்போது உக்ரைனின் லுஹான்ஸ்க்  பிராந்தியம் முழுவதையும், டொனெட்ஸ்க்  பிராந்தியத்தின் 85% க்கும் அதிகமான பகுதிகளையும் கட்டுப்படுத்துவதாகக் கூறிய புட்டின், கெர்சன் மற்றும் சப்போரிஷியா ஆகிய மாகாணங்களையும் உக்ரைன் முழுமையாகத் தங்களுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற தனது நிபந்தனையை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

உக்ரைனின் இந்த அமைதி முன்மொழிவுக் கடிதம், ரஷ்யாவின் அண்மைக்கால இராணுவப் பின்னடைவுகள் மற்றும் கிரிமியாவுக்கான விநியோகப் பாதைகள் மீதான உக்ரைனின் தொடர் தாக்குதல்களுக்கு மத்தியில் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

பொருளாதார மாநாடு தொடங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கின் எண்ணெய் முனையம் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதுடன், வியாழக்கிழமை இரவு மரியுபோல் மற்றும் பெர்டியன்ஸ்க் ஆகிய ஆக்கிரமிக்கப்பட்ட துறைமுகங்களில் இராணுவ எரிபொருட்களை ஏற்றிச் சென்ற ஐந்து ரஷ்ய சரக்குக் கப்பல்களை உக்ரைனின் ஆளில்லாப் பிரிவு தாக்கி அழித்துள்ளது. இதில் அஜர்பைஜானைச் சேர்ந்த 5 மாலுமிகள் கொல்லப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

புட்டினின் இந்த நிராகரிப்பு குறித்துக் கருத்துத் தெரிவித்த ஜெலன்ஸ்கி, “துரதிர்ஷ்டவசமாக ரஷ்யா மீண்டும் போரையே தேர்ந்தெடுக்கிறது. இது ஒரு பலவீனமான பதில்” என்றார்.