நீதி கோரி நீதிமன்றம் செல்வேன் – ஞா.கிசோர்

என் மீதான குற்றச்சாட்டு பத்திரத்தை வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் என்னிடம் வழங்கவில்லை என சாவகச்சேரி நகரசபை உப தவிசாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஞா.கிசோர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி ஆணையாளரின் சுற்றறிக்கையை சபையில் விமர்சித்து, அதனை தூக்கி வீசிய குற்றத்துக்காக, நகரசபை உப தவிசாளர் பதவியிலிருந்து ஞா.கிசோரை வட மாகாண ஆளுநர் நீக்கியும், நகரசபை உறுப்புரிமையை வறிதாக்கியும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார்.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே கிசோர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

உள்ளூராட்சி ஆணையாளரின் சுற்றறிக்கையின் பிரகாரம், நடவடிக்கை எடுத்தால் சாவகச்சேரியில் 700க்கும் மேற்பட்ட கடைகளை மூட வேண்டியதாக இருக்கும்.

கடந்த காலங்களில் உள்ளூராட்சி சபைகளினால் கட்டட அனுமதிகள் வழங்குவதில் கால தாமதங்கள் ஏற்பட்டன. அதனை நாம் தற்போது சீர் செய்துள்ளோம்.

புதிய வர்த்தக நிலையங்களை கட்டி, வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் குடிபுகு சான்றிதழ் கட்டாயம் பெறவேண்டும் என்பதனை வலியுறுத்தி, குடிபுகு சான்றிதழ்களை பெற வைத்துள்ளோம்.

ஆனால் நகரசபை கட்டடங்களில் உள்ள வர்த்தக நிலையங்கள் உட்பட சில வர்த்தக நிலைய கட்டடங்கள் 50 ஆண்டுகளுக்கு மேலானவை. அவற்றுக்கு குடிபுகு சான்றிதழ் பெறுவதில் பல சிக்கல்கள் உள்ளன. உள்ளூராட்சி ஆணையாளரின் சுற்றறிக்கையை அவ்வாறே பின்பற்றினால் பல வர்த்தக நிலையங்களை மூடவேண்டிவரும். அதனால் அது தொடர்பில் சபையில் பேசினேன்.

அண்மையில் சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தங்குமிடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. அதற்கு எந்த சபையில் அனுமதி பெற்றனர்.

இராணுவத்தினர் முகாம்களுக்குள் கட்டட வேலைகளை செய்கின்றார்கள். அவர்களுக்கு யார் அனுமதி கொடுத்தது? அதுமட்டுமன்றி, சாவகச்சேரியில் பல அரச கட்டடங்களுக்கே உரிய அனுமதிகள் இல்லாத நிலைமைகள் காணப்படுகின்றன.

இவ்வாறான நிலையில், வர்த்தக நிலையங்களை முடக்கும் செயற்பாடாக அனுமதி விடயங்களை இறுக்கமாக பின்பற்ற முயல்கின்றனர்.

நான் பதவிக்காக வரவில்லை. என் பதவி பறிபோனதால் அஞ்சி ஒதுங்கவும் இல்லை. எனக்கான நீதியை கோரி நான் நீதிமன்றம் செல்வேன். நீதித்துறை மீது எனக்கு நம்பிக்கை உண்டு. எனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக நீதிமன்றம் செல்லவுள்ளேன் என தெரிவித்தார்.