நாட்டின் வரி வருமானத்தில் கணிசமான ஒரு பகுதி விவசாய சமூகத்திற்காகவே செலவிடப்படுகிறது. நெல்லுக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள விலைக்கு அமைவாகவே விவசாயிகள் நெல்லை விற்பனை செய்யவேண்டும். குறைந்த விலைக்கு நெல்லை விற்பனை செய்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். நெல்லுக்கான உத்தரவாத விலையை நிலையாக பேணுவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள என்று விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்தார்.
“நீர்ப்பாசன பெருமை – எமது மரபுரிமை” எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும், மகா மங்கடவல குளக்கட்டு புனரமைப்பு மற்றும் மதகுடன் கூடிய அணைக்கட்டு கட்டுமானப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
விவசாயிகளின் நலனுக்காக பில்லியன்கணக்கான ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாட்டிற்கு கிடைக்கும் வெளிநாட்டு வருவாயும் விவசாயத் துறைக்கு ஆதரவளிப்பதற்காகவே பயன்படுத்தப்படுகிறது. நெல் விவசாயிகள் மட்டுமன்றி, சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களும், மிளகு ஏற்றுமதியாளர்களும் கூட தேசிய பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றுகின்றனர்.
நெல் உற்பத்தி துறையில் விலை ஏற்ற இறக்கங்கள் கவலையானதாக காணப்படுகிறது. நிலையான நெல் விலையைப் பேணுவதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டுச் சந்தையில் எமது நாட்டு அரிசிக்கு கேள்வி இல்லை. நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியசாலைகள் திறக்கப்படும் போது விவசாயிகள் நெல்லை ஒப்படைக்கலாம்.
மேலும் விலை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் அதனை களஞ்சியப்படுத்தி வைக்க வேண்டாம். இல்லையெனில், இந்த முறை ஏற்பட்ட அதே சூழ்நிலை மீண்டும் ஏற்படும். நெல் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கம் ஒரு பிரச்சினையாகும். நெல்லுக்கு ஒரு நிலையான விலையைப் பேண நாங்கள் முயற்சித்து வருகிறோம். செலவுகள் அதிகரித்து, உற்பத்திச் செலவு கூடும் போது, விலையும் அதிகரிக்க வேண்டும். உற்பத்திச் செலவுகளுக்கான மானியங்களை வழங்கும் அதேவேளையில், நெல் விலையை முடிந்தவரை நிலையானதாக வைத்திருப்போம்.
உலகளாவிய சவால்கள் இருந்தபோதிலும், நாட்டில் எந்தவொரு தொழிற்துறையும் வீழ்ச்சியடைய இடமளிக்கவில்லை. எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவது தடுக்கப்பட்டுள்ளது. விவசாய சேவை நிலையங்கள் ஊடாக நெல் விவசாயிகளுக்கு விநியோகிப்பதற்காக, தனியார் உர நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு உரம் வழங்கி பங்களிப்பு செய்துள்ளோம்.
தனியார் நிறுவனங்கள் சுரண்டுவதற்காக மட்டுமே இருக்கின்றன என்று மக்கள் அடிக்கடி கூறுகிறார்கள். ஆனால், எதிர்காலத்தில் உரங்களின் விலையும் குறையும். எமது விவசாய சமூகம் பொதுமக்களின் பரந்த நலன்களைக் கருத்தில் கொள்ளும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றார்.





