வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மற்றும் ஏனையோருக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றினால் விதிக்கப்பட்ட பிடியாணை நீதிமன்றம் மீளப் பெற்றுள்ளது.
சட்டவிரோத தையிட்டி விகாரைக்கு எதிராக போராடினார்கள் என்ற காரணத்திற்காக பலாலி பொலிசாரினால் வேலன் சுவாமிகள், வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மற்றும் வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினரும் காணி உரித்தாளருமான சாருஜன் உள்ளிட்ட ஐவர் பலாலி பொலிசாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர். இவ் வழக்கு விசாரணைக்காக நேற்று வியாழக்கிழமை (02.07.2026) எடுத்துக்கொள்ளப்பட்டது. மேலும் தையிடடி விவகாரத்துடன் தொடர்பு பட்ட வழக்குகளும் தவணையிடப்பட்டிருந்த நிலையில் எடுத்தக்கொள்ளப்பட்டிருந்தன. இவ் வழக்குகளுக்கு சமூகமளிக்காதவர்களுக்கு எதிராக நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
இந் நிலையில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் இன்று வெள்ளிக்கிழமை உடனடியாகவே மன்றில் முன்னிலையாகி வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் சட்டத்தரணி கஜேந்திரன் ஊடாக மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதனை விசாரணைக்கு எடுத்த நீதிமன்றம் நீதிமன்றுக்கு சமூகமளிக்காமையினால் நீதிமன்றினால் விதிக்கப்பட்ட பிடியாணையை மீளப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.





