கொழும்பில் செம்மணி மனித புதைகுழிக்கு நீதிகோரி போராட்டம்

செம்மணி மனித புதைகுழிக்கு நீதிகோரி கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்   பேரணியாக செல்ல முயன்றவேளை பொலிஸார் தடுத்து நிறுத்தியதால் பெரும் குழப்பநிலையேற்பட்டது.

 

செம்மணி மனித புதைகுழிக்கு நீதிகோரி கொழும்பு கோட்டை புகையிரதநிலையத்திற்கு முன்னாள் நீதிக்கான மக்கள் சக்தி ஏற்பாடு செய்த போராட்டம் இடம்பெற்றது.

 

 

செம்மணிஉட்பட அனைத்து புதைகுழிகளுக்குமான  நீதிக்கான குரலைபலப்படுத்துவோம்  ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கை  இல்லை என்பதை உலகிற்கு கூறுவோம்  சர்வதேச தரத்திலான  அகழ்வு பணி மட்டுமல்ல  நீதிக்கான சர்வதேசத்தின் தலையீட்டையும் குற்றவாளிகள்  நீதியின் முன் நிறுத்தப்படவும் ஓங்கி  குரல் எழுப்புவோம்  என தெரிவித்து நீதிக்கான மக்கள் சக்தி ஏற்பாடு செய்த போராட்டத்தில் பெருமளவானவாகள் கலந்து கொண்டிருந்தனர்.

போராட்டத்தில் கலந்துகொண்டோர்’புத்த தேசமா? புதைகுழிகள் தேசமா? செம்மணயில் எலும்புகளாக எம்மவர்கள் சர்வதேசமே தமிழர்களை ஏமாற்றாதே..! யுத்த குற்றத்தின் சாட்சி செம்மணி வட கிழக்கில் நில ஆக்கிரமிப்பை நிறுத்து’ போன்ற பதாதைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில்    சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை  செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் சிவில் சங்க உறுப்பினர்கள் ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் பொதுமக்கள் என பலர் போராட்டத்தில் பெருமளவானவாகள் கலந்து கொண்டிருந்தனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னோக்கி பேரணியாக செல்ல முயன்றவேளை பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர்

ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்களை முன்னோக்கி செல்வதற்கு அனுமதிக்குமாறு பொலிஸாரிடம் வேண்டுகோள் விடுத்தபோதிலும் பொலிஸார் அதற்கு அனுமதிக்கவில்லை.

இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னோக்கி நகர முற்பட்டவேளை பொலிஸார் அவர்களை தடுத்துநிறுத்தியதால் குழப்பநிலையேற்பட்டது.

இதேவேளை  தமது போராட்டம் குறித்து தெரிவித்துள்ள  நீதிக்கான மக்கள் சக்தி அமைப்பினர் 1990 இன் பின்னர் வடக்கிலும் தெற்கிலுமாக புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டனஇ துரையப்பா விளையாட்டரங்கு மிருசுவில் மன்னார் சாதொச கட்டிட தொகுதி  மாத்தளை  போன்ற இடங்களிலும் மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

ஆனால் அவற்றை தேடுவதிலோ அதற்கான நீதியை நிலைநாட்டுவதற்காக  எந்த ஆட்சியாளரும் துணியவில்லை  பட்டலந்த வதை முகாம் சலசலப்பை ஏற்படுத்திய போதிலும் தற்போது இது குறித்து மௌனமே நிலவுகின்றது என தெரிவித்துள்ளனர்.

அரசபயங்கரவாதத்தின் கோரப்பிடிக்குள்  1971-1988-89  காலப்பகுதியில்  சிக்கி கொடுமைகளை  அனுபவித்த மக்க  விடுதலை முன்னணியினர் ஆட்சியில் இருந்தாலும்  அவர்களும் கடந்த கால  ஆட்சியாளர்களை போலவே  குற்றவாளிகளை  பாதுகாக்கும் நிலையிலேயே உள்ளனர் ஆதலால்  இவர்கள் காலத்திலும் பாதிக்கப்பட்டோருக்கு  நீதி கிட்டப்போவதில்லை  என்பது திண்ணம் என தெரிவித்துள்ளனர்.