சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் நடைபெறவுள்ள உலக சுகாதார நிறுவனத்தின் 79 ஆவது உலக சுகாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக, சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையிலான குழுவினர் நேற்று (15) ஜெனிவா நோக்கிப் பயணமானார்கள்.
இன்று சனிக்கிழமை (16) ஆரம்பமாகவுள்ள இந்த மாநாடு எதிர்வரும் 22 ஆம் திகதி வரை 7 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் பிராந்திய மாநாட்டின் தலைவராக பதவி வகிக்கும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, எதிர்வரும் 18 ஆம் திகதி இந்த மாநாட்டில் விசேட உரையாற்றவுள்ளார். இந்த விஜயத்தின் போது, பூட்டான், தாய்லாந்து, பங்களாதேஷ் உள்ளிட்ட பல நாடுகளின் சுகாதார அமைச்சர்களுடனும், நிப்பான் அறக்கட்டளை போன்ற சர்வதேச அமைப்புகளுடனும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் அமைச்சர் ஈடுபடவுள்ளார்.
அமைச்சருடன் சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, பிரதிப் பணிப்பாளர் நாயகங்களான வைத்தியர் எஸ். ஸ்ரீதரன், வைத்தியர் சமித்தி சமரகோன் மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் வைத்தியர் ஜானகி விதான பத்திரண உள்ளிட்ட உயர் அதிகாரிகள் குழுவினரும் இம்மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். கடந்த 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நடைபெற்ற 78 ஆவது பிராந்திய மாநாட்டில், தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் தலைவராக வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




