நாட்டில் 80 கோடி ரூபாவிற்கும் அதிக பணம் மாயமாகியுள்ள போதிலும், ஜனாதிபதியும் அரசாங்கமும் இன்னும் தூக்கத்தில் இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஹொரணையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், அரசாங்கத்தின் தற்போதைய செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்தார்.
அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நிதி அமைச்சின் செயலாளரின் செயல்பாடுகளால் 80 கோடி ரூபாவிற்கும் அதிகமான பணம் காணாமல் போயுள்ளது. இன்று டொலரின் பெறுமதி அதிகரித்துள்ள நிலையில், அந்த இழப்பு இன்னும் அதிகமாக இருக்கலாம். ஆனால் நிதி அமைச்சு, மத்திய வங்கி மற்றும் அரசாங்கம் இது குறித்து எந்த கவலையுமின்றி நித்திரையில் உள்ளன.
இந்த அரசாங்கம் இப்போது ‘ஹேக்கர்களின் அரசாங்கமாக’ மாறியுள்ளது. நிலக்கரி கொள்வனவு, தனியார் வங்கி ஒன்றில் 13 பில்லியன் மாயம், அஞ்சல் திணைக்களம் மற்றும் துறைமுகத்தில் கொள்கலன்கள் மாயம் என அனைத்திற்கும் ஹேக்கர்களே காரணம் என சொல்லப்படுகிறது. இப்போது ஹேக்கர் அரசியலாக மாறியுள்ளது.
ஜனாதிபதி ஒரு அரசியல்வாதி, ஆனால் நீதியமைச்சர் ஒரு சட்டத்தரணி. நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் குறித்து அரசியல் மேடைகளில் பேசுவது வெட்கக்கேடானது. நீதியமைச்சர் இது குறித்து ஜனாதிபதிக்கு அறிவுரை வழங்கியிருக்க வேண்டும்.
மணிக்கு 1000 கிலோமீற்றர் வேகத்தில் நாட்டை நகர்த்துவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று ரயிலின் வேகத்தை 20 கிலோமீற்றர் ஆகக் குறைத்துள்ளனர். மஹிந்த ராஜபக்சவிற்குப் பிறகு ரயில்வே துறையில் எந்தவொரு முறையான நவீனமயமாக்கலும் இடம்பெறவில்லை.
அரசாங்கம் இன்று ஊடகங்களையும் சமூக வலைதளங்களையும் ஒடுக்குவதன் மூலம் உண்மைகளை மறைக்கப் பார்க்கிறது. இது 88, 89 காலப்பகுதி அல்ல என்பதை அரசாங்கம் நினைவில் கொள்ள வேண்டும். இன்று எதையும் மறைக்க முடியாது.
இந்த ஊழல்கள் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளுக்கு அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும் என்றும், இறுதியில் இந்த இழப்புகள் அனைத்தையும் நாட்டு மக்களே சுமக்க வேண்டியுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.






